செய்திகள்

முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு - முக ஸ்டாலின் ஏப்ரல் 29-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

Published On 2019-03-29 19:27 GMT   |   Update On 2019-03-29 19:27 GMT
ஊராட்சி சபை கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 29-ந்தேதி திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. #MKStalin
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா பள்ளப்பட்டியில் கடந்த பிப்ரவரி மாதம் 15-ந்தேதி தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். இந்த நிலையில் திண்டுக்கல் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு குற்றவியல் வக்கீல் மனோகரன் ஒரு வழக்கு தொடர்ந்தார்.

அதில் நிலக்கோட்டை தாலுகா பள்ளப்பட்டியில் தி.மு.க. சார்பில் நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவதூறாக பேசியதாக கூறியிருந்தார். இந்த வழக்கு நேற்று முதன்மை மாவட்ட நீதிபதி முரளிசங்கர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.



அப்போது, அரசு வக்கீல் மனோகரன் ஆஜரானார். நீதிபதி முரளிசங்கர் விசாரணை நடத்தினார். இதையடுத்து வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (ஏப்ரல்) 29-ந்தேதிக்கு தள்ளி வைத்தார். அன்றைய தினம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் காலநீட்டிப்பு தேவைப்பட்டால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தரப்பு வக்கீல் மூலம் மனுத்தாக்கல் செய்யலாம் என்றும் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Edappadipalanisamy #MKStalin
Tags:    

Similar News