செய்திகள்

கூடலூர் பகுதியில் ஓட்டல்- டீக்கடைகளில் சமையல் கியாஸ் சிலிண்டர் பயன்பாடு

Published On 2019-03-11 12:19 GMT   |   Update On 2019-03-11 12:19 GMT
கூடலூர் பகுதியில் ஓட்டல் மற்றும் டீக்கடைகளில் சமையல் கியாஸ் சிலிண்டர் பயன்படுத்துவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கூடலூர்:

தேனி அருகே கூடலூர் நகரம் மற்றும் கிராமப்புறங்களான குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, ஆங்கூர்பாளையம், லோயர்கேம்ப் ஆகிய பகுதி மக்களுக்கு 2 தனியார் நிறுவனங்கள் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வினியோகிக்கப்படுகிறது.

இந்த சிலிண்டர்கள் வீட்டு இணைப்பு மற்றும் வர்த்தக இணைப்பு என்று இருவகையான இணைப்புகளாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது.

கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஓட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் வர்த்தக எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்துவதில்லை. அதற்கு பதிலாக மத்திய அரசு மானியத்துடன் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை குறிப்பாக வீட்டு இணைப்பிற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர்களை முறைகேடாக பயன்படுத்துகின்றனர். இதனால் சில நேரங்களில் வீட்டு இணைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

எனவே மானிய விலையில் வழங்கப்படும் வீட்டு இணைப்பிற்கான எரிவாயு சிலிண்டர்கள் முறையாக பயன்படுத்தப்படுகிறதா? என்று மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் ஓட்டல் மற்றும் டீக்கடைகளில் பயன்படுத்தப்படுவதை தடுக்க சம்மந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News