வம்பாகீரப்பாளையம் மெரீனா பீச்சில் மருத்துவ கல்லூரி மாணவர்களை மிரட்டி பணம் பறிப்பு - 2 வாலிபர்கள் கைது
புதுச்சேரி:
விழுப்புரம் சுந்தர்ராஜன் நகரை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 24). இவர் மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் விடுதியில் தங்கி எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் தனது கல்லூரி நண்பர்கள் 3 பேருடன் வம்பா கீரப்பாளையத்தில் உள்ள பாண்டி மெரீனா பீச்சுக்கு வந்தார். அங்கு அவர்கள் நடை பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் மருத்துவ கல்லூரி மாணவர்களை மிரட்டி அவர்களிடம் இருந்த ஆயிரம் ரூபாயை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.
இதையடுத்து மதிவாணன் ஒதியஞ்சாலை போலீசில் பணம் பறித்து சென்றவர்களின் மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணுடன் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புசெல்வம், சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, பெரியசாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்திய போது, அந்த மோட்டார் சைக்கிள் வேல் ராம்பட்டு மக்கள் நகரை சேர்ந்த காளிமுத்து (39) என்பவருக்கு சொந்தமானது என்பதும், சம்பவத்தன்று இவரும், இவரது நண்பரான தேங்காய்திட்டு வடக்கு காலனியை சேர்ந்த சந்துரு என்ற சந்திரசேகர் (38) என்பவரும் சேர்ந்து மருத்துவ கல்லூரி மாணவர்களை மிரட்டி பணம் பறித்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ. ஆயிரம் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.