செய்திகள்

அதிமுக எம்பி ராஜேந்திரன் மரணம்- எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர் செல்வம் நேரில் அஞ்சலி

Published On 2019-02-23 09:08 GMT   |   Update On 2019-02-23 09:08 GMT
திண்டிவனம் அருகே இன்று சாலை விபத்தில் உயிரிழந்த அ.தி.மு.க. எம்.பி. ராஜேந்திரனின் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். #RajendranMP
திண்டிவனம்:

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் டாக்டர் ராமதாசின் பா.ம.க. இடம்பெற்றுள்ளது.

அந்த கட்சிக்கு 7 தொகுதிகளை அ.தி.மு.க. ஒதுக்கியுள்ளது.

இதையொட்டி அ.தி.மு.க. தலைவர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு விருந்து அளிக்க பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று இரவு ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த விருந்து நிகழ்ச்சி திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்தில் நடைபெற்றது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், விழுப்புரம் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விருந்து நிகழ்ச்சி முடிந்ததும் முதல்- அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சென்னைக்கு புறப்பட்டு வந்து விட்டனர்.

ராஜேந்திரன் எம்.பி. திண்டிவனத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் இரவு தங்கினார். இன்று காலை 6 மணிக்கு கார் மூலம் சென்னைக்கு புறப்பட்டார். காரை அருமைச்செல்வம் என்பவர் ஓட்டினார்.


ராஜேந்திரன் எம்.பி.யுடன் அவரது உறவினர் தமிழ்ச்செல்வன் வந்தார். திண்டிவனம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

இன்று காலை திண்டிவனம் பகுதியில் பனிமூட்டம் அதிகளவில் காணப்பட்டது. ராஜேந்திரன் எம்.பி. கார் திண்டிவனம் போலீஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது பனி மூட்டம் காரணமாக சாலையில் இருந்த தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது.

இதில் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. காரில் இருந்த ராஜேந்திரன் எம்.பி., கார் டிரைவர் அருமைச்செல்வம், தமிழ்ச்செல்வன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

திண்டிவனம் போலீசார் அவர்களை திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் ராஜேந்திரன் எம்.பி. பரிதாபமாக இறந்தார். அவருக்கு வயது 62.

காயம் அடைந்த அருமைச் செல்வம், தமிழ்ச்செல்வன் ஆகியோர் திண்டிவனம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விபத்தில் இறந்த ராஜேந்திரன் எம்.பி.யின் உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று காலை 11 மணிக்கு கார் மூலம் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.


அவர்கள் அங்கு வைக்கப்பட்டுள்ள ராஜேந்திரன் எம்.பி.யின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

அமைச்சர் சிவி.சண்முகம் மற்றும் அ.தி.மு.க. பிரமுகர்களும் ராஜேந்திரன் எம்.பி. உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்பு அவர்கள் ராஜேந்திரன் எம்.பி.யின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

ராஜேந்திரன் எம்.பி.யின் சொந்த ஊர் திண்டிவனம் அருகே உள்ள ஆதனப்பட்டு. சாந்தா என்ற மனைவியும், விக்னேஷ்வரன் என்ற மகனும், திவ்யா, தீபிகா ஆகிய மகள்களும் உள்ளனர். #RajendranMP #ADMK #Edappadipalaniswami #OPS
Tags:    

Similar News