லாலாப்பேட்டை அருகே லாரி மீது மினிவேன் மோதல்- ஒருவர் பலி
லாலாபேட்டை:
பொள்ளாச்சியை சேர்ந்த ஜெயராமபாண்டியன் (வயது 59) என்பவர் ஆமினி வேனை ஓட்டி வந்தார். வேன் நேற்று முன்தினம் கோவையில் இருந்து திருநல்லார் சென்ற பின்னர் மீண்டும் கோவைக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.
திருச்சி-கருர் தேசிய நெடுஞ் சாலையில் மகாதான புரம் பெட்ரோல்பங்க் அருகில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த முரளிதரன் (41) என்பவர் லாரியை நிறுத்தியிருந்தார். அப்போது அங்கு வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்பக்கத்தில் மோதியது.
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த பொள்ளாச்சியை சேர்ந்த சந்திரசேகர் (62) சம்பவ இடத்திலையே உயிரிழந்தார். மேலும் கோவையைச் சேர்ந்த பத்மாவதி (56), சோனியா (29), சரண்யா(27), நிவேதா (27), உஷாநந்தினி(29) விஷ்ணு (29) ஆகிய 6 பேரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இறந்த சந்திரசேகரின் உடல் பிரேத பரிசோதனைக்காக குளித்தலை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து லாலாப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.