ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திய வாலிபர் கைது
சென்னை:
தமிழக போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவை சேர்ந்த 3 டி.எஸ்.பி.க்கள், 10 இன்ஸ்பெக்டர்கள், 7 சப்-இன்ஸ்பெக்டர்கள், 20 போலீசார் கொண்ட தனிப்படை போலீஸ் சென்னை, காஞ்சீபுரம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.
சென்னையில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் 3 குழுக்களாக பிரிந்து சென்று மாதவரம், கோயம்பேடு, செங்குன்றம் ஆகிய பஸ் நிலையங்களிலும், சென்னை சென்ட்ரல், எழும்பூர் மற்றும் பெரம்பூர் ஆகிய ரெயில் நிலையங்களிலும் டி.பி. சந்திரம், நுங்கம்பாக்கம, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இதில் மாதவரம் பஸ் நிலைய நுழைவு வாயிலில் அசார் என்ற அசாருதீன் (23) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். கேரளாவை சேர்ந்த இவரது பையில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. விசாரணையில் இந்த கஞ்சா ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து கேரளாவிற்கு கொண்டு செல்வதற்காக சென்னை மாதவரம் பஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தது தெரியவந்தது.