சென்னிமலை அருகே மரத்தில் தூக்கு போட்டு லாரி டிரைவர் தற்கொலை
சென்னிமலை:
சென்னிமலை அருகில் உள்ள ஈங்கூரில் மாரியம்மன் கோவில் வீதியில் வசிப்பவர் முருகேசன் (51). இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சமீபகாலமாக வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மிகவும் விரக்தியடைந்து காணப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் இவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். குடும்பம் நடத்த பணம் எதுவும் தராமல் இருந்ததால் இதுகுறித்து இவரது மனைவி இவரிடம் கேட்டுள்ளார். அப்போது வீட்டை விட்டு வெளியில் சென்ற முருகேசன் இரவு வீட்டிற்கு திரும்பவில்லை.
பின்னர் அதிகாலையில் சென்று தேடியபோது ஈங்கூரில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் அருகில் வேப்ப மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்தது தெரிந்தது.
இதுகுறித்து இவரது மகன் கவுரிசங்கர் சென்னிமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.