search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னிமலை"

    • மளிகை கடையை சீல் வைக்காமலும் இருக்க பணம் ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என மிரட்டும் வகையில் பேசியுள்ளார்.
    • கருப்புசாமியிடம் பணத்தை பறித்து சென்ற வாலிபர் மோசடி நபர் என தெரிய வந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே உள்ள பனியம்பள்ளி ஊராட்சி துலுக்கம் பாளைத்தை சேர்ந்தவர் கருப்புசாமி (38). இவர் வீட்டின் அருகே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

    கருப்புசாமி நேற்று வழக்கம் போல் கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்தார். தொடர்ந்து அவர் நான் உணவு பாதுகாப்பு அலுவலர் என்றும் உங்கள் கடையில் பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக எனக்கு தகவல் வந்ததால் உங்கள் கடையை சோதனை செய்ய வந்துள்ளேன் என கூறியுள்ளார்.

    இதை தொடர்ந்து அந்த வாலிர் உங்கள் மீது வழக்கு போடாமலும், மளிகை கடையை சீல் வைக்காமலும் இருக்க பணம் ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என மிரட்டும் வகையில் பேசியுள்ளார்.

    இதனால் பயந்து போன கருப்புசாமி கடையில் இருந்த பணத்தை எடுத்து அந்த வாலிபரிடம் ரூ.10 ஆயிரத்தை கொடுத்துள்ளார். அப்போது அந்த வாலிபரிடம் அடையாள அட்டையை காட்டுங்கள் என கருப்புசாமி கூறியுள்ளார். அதையெல்லாம் காட்ட முடியாது எனக்கூறி அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.

    இதனால் சந்தேகம் அடைந்த கருப்புசாமி அந்த பகுதியில் இருந்தவர்களிடம் இது பற்றி தகவல் தெரிவித்துள்ளார். அப்போது கருப்புசாமியிடம் பணத்தை பறித்து சென்ற வாலிபர் மோசடி நபர் என தெரிய வந்தது.

    அதனைத்தொடர்ந்து கருப்புசாமி சென்னிமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்போது உணவு பாதுகாப்பு அலுவலராக நடித்து பணத்தை பறித்து சென்றவர் ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டு வீதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்பவரின் மகன் நவீன்குமார் (29) என தெரிய வந்தது. பின்னர் நவீன்குமாரை போலீசார் கைது செய்து பெருந்துறை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி போலீசார் அவரை கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    • மேற்கு ராஜ வீதி வழியாக வடக்கு நோக்கி வரும் வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கிறது.
    • பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் தென் மாவட்டங்களுக்கும், அதேபோல் அங்கிருந்து வரும் லாரிகள் வட மாநிலங்களுக்கும் சென்று வருகிறது. இதனால் எப்போதும் சென்னிமலை நகரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது உண்டு.

    சென்னிமலை பஸ் நிலையத்தை கடந்து பெருந்துறை மற்றும் வெள்ளோடு ரோடு வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் தெற்கு ராஜ வீதி, மேற்கு ராஜ வீதி வழியாக குமரன் சதுக்கத்தை அடைந்து செல்லும் வகையில் ஒரு வழி பாதையாக உள்ளது. அதேபோல் குமரன் சதுக்கம் வழியாக பஸ் நிலையம் நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் வடக்கு ராஜ வீதி மற்றும் கிழக்கு ராஜ வீதி வழியாக செல்லும் வகையில் ஒரு வழி பாதையாக உள்ளது.

    ஆனால் சென்னிமலை முருகன் கோவிலுக்கு கார்களில் வரும் பக்தர்கள் வடக்கு ராஜ வீதி மற்றும் தெற்கு ராஜ வீதி வழியாக பார்க் ரோட்டை அடைந்து முருகன் கோவிலுக்கு செல்லாமல் குமரன் சதுக்கத்தில் இருந்து ஒரு வழிப்பாதையாக உள்ள மேற்கு ராஜவீதி வழியாக நுழைகின்றனர்.

    இதனால் மேற்கு ராஜ வீதி வழியாக வடக்கு நோக்கி வரும் வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கிறது. குறிப்பாக செவ்வாய்க்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் நூற்றுக்கணக்கான கார்களில் சென்னிமலை முருகன் கோவிலுக்கு வருவது உண்டு. அப்போது ஒரு வழிப்பாதையான மேற்கு ராஜ வீதி வழியாக கார்கள் நுழைவதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

    தினமும் காலை நேரங்களில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி செல்லும் வாகனங்கள் மேற்கு ராஜ வீதி வழியாக செல்லும்போது மலைக்கோவிலுக்கு செல்லும் வாகனங்கள் எதிரே வருவதால் மேற்கொண்டு செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

    இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மாலை நேரத்திலும் இதே பிரச்சனை தான் ஏற்படுகிறது.

    சென்னிமலை போலீஸ் நிலையத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்திலேயே மேற்கு ராஜ வீதி இருப்பதால் குமரன் சதுக்கத்தில் இருந்து மேற்கு ராஜ வீதி வழியாக கார்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் எதுவும் செல்லாமல் இருக்க போலீசார் அங்கு கண்காணித்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். மேலும் கனரக வாகனங்கள் நகருக்குள் வரால் இருக்க புற வழி சாலை ரிங் ரோடு அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரசீது மொபைல் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்ப வசதி செய்யப்பட்டுள்ளது.
    • கியூ ஆர் கோடு வசதியினை பயன்படுத்தி பக்தர்கள் விரைவாக நன்கொடை செலுத்த முடியும்.

    சென்னிமலை:

    ஆதி பழனி என போற்றப்படும் புகழ் பெற்ற சென்னிமலை முருகன் கோவிலிற்கு ஈரோடு மாவட்டம் அல்லாமல் தமிழகம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர்.

    வாரம் தோறும் செவ்வாய்கிழமை மற்றும் சஷ்டி, கிருத்திகை, அம்மாவாசை உள்ளிட்ட விழா காலங்களில் மிக அதிக அளவில் பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை வழங்கி செல்வதுடன் நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.

    தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் தரிசனத்திற்கு தனியாகவும், நன்கொடைகள் செலுத்த திருவிழா நேரத்தில் தனியாகவும் வரிசையில் காத்திருந்து நன்கொடைகள் வழங்க அன்னதானத்திற்கு தனியாகவும், திருப்பணிகளுக்கு தனியாகவும், வேண்டுதல் செய்ய பொது நன்கொடை தனியாகவும் செலுத்துவதில் பக்தர்களுக்கு மிக சிரமம் இருந்து வருகிறது.

    மேலும் நன்கொடைகள் செலுத்தி அறநிலைய துறை பணியாளர்களிடம் நன்கொடை ரசீது பெருவதில் கூடுதல் காலதாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்கவும், பக்தர்கள் சிரமம் இன்றி நன்கொடைகள் செலுத்த வசதியாக 'கியூ ஆர் கோடு ' வசதியினை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்துள்ளனர்.

    இது குறித்து சென்னி மலை மலை மீது கோவில் வளாகத்தில் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். மேலும் டிக்கெட் வழங்கும் கவுன்டரில் கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்ய வசதி செய்துள்ளனர். நன்கொடை செலுத்தும் பக்தர்களுக்கு அது குறித்த தகவல், ரசீது மொபைல் எண்னுக்கு குறுந்தகவல் அனுப்ப வசதி செய்யப்பட்டுள்ளது.

    இந்த கியூ ஆர் கோடு வசதியினை பயன்படுத்தி பக்தர்கள் விரைவாக நன்கொடை செலுத்த முடியும் என செயல் அலுவலர் தெரிவித்தார். 

    • பொங்கல் விழா காலை தொடங்கி நடந்தது.
    • பக்தர்கள் ஆடு, கோழி பலி கொடுத்து மாரியம்மனை வழிபாடு செய்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை டவுன் காங்கேயம் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது மாரியம்மன் கோவில். மாரியம்மனுக்கு ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் 15 நாள் பொங்கல் வைபோகம் சிறப்பாக கொண்டாடப்படும் . இந்த ஆண்டு விழா கடந்த மாதம் 18-ந் தேதி பூச்சாட்டுதல் நிக ழ்ச்சியுடன் தொடங்கியது.

    தொடர்ந்து 25-ந் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. அன்று முதல் தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலும் காலை பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடந்து வந்தது.

    கம்பத்திற்கு தினமும் பெண்கள் பயபக்தியுடன் மஞ்சள் நீர் ஊற்றியும், கம்பத்திற்கு வேப்பிலை அலங்காரம் செய்தும், மஞ்சள் பூசியும் வழிபாடு நடத்தினர்.

    வேண்டுதல்காரர்கள் அக்னி சட்டி எடுத்தும் நேர்த்திகடன் செலுத்தி வந்தனர். தினமும் இரவு மாரியம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா காட்சியும் நடந்தது.

    இதனை தொடர்ந்து நேற்று இரவு மாவிளக்கு ஊர்வலமும் சிறப்பு பூஜையும் நடந்தது. இன்று பொங்கல் விழா காலை 7 மணிக்கு தொடங்கி நடந்தது.

    பக்தர்கள் பொங்கல் வைத்தும், ஆடு, கோழி பலி கொடுத்தும், முடி காணிக்கை செலுத்தியும் பக்தி பரவ சத்துடன் மாரியம்மனை வழிபாடு செய்தனர். நாளை மஞ்சள் நீர் நிகழ்ச்சியுடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சரவணன் தலைமையில் கோவில் தலைமை பூசாரி வாசுதேவன், புலவர் அறிவு, மற்றும் பணியாளர்கள், கட்டளைதாரர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

    • கைலாசநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரி சனம் செய்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை டவுன் கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா காலை 10 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது. தொடர்ந்து கலச ஸ்தாபனம், யாக பூஜை, பூர்ணாஹூதி, தீபாரதனை நடந்தது.

    அதைத்தொடர்ந்து உற்சவர் நடராஜ பெருமானு க்கும், தாயார் சிவகாமி அம்மையாருக்கும் தேன், பால், தயிர் உள்பட 16 திரவியங்கள் மூலம் சிறப்பு அபிேஷகம் நடந்தது. அதன் பின்பு அலங்கார பூஜை நடந்தது.

    பூஜைகளை சென்னி மலை முருகன் கோவில் ஸ்தானீகம் ராஜசேகர் சிவாச்சாரியார் தலைமை யில் ரவி குருக்கள், செல்வ ரத்தின குருக்கள், பிரபு குருக்கள், மாணிக்கம் குரு க்கள் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

    இந்த ஆனி திருமஞ்சன அபிேஷக விழாவில் ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரி சனம் செய்தனர். கட்டளை தாரர்கள் சார்பாக பக்தர்க ளுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

    • வழக்கு குறித்த பதிவேடுகளை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆய்வு செய்தார்.
    • கொள்ளையடித்த சம்பவம் குறித்தும் போலீசாரிடம் கேட்டறிந்தார்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சென்னிமலை போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.

    அவரை பெருந்துறை டி.எஸ்.பி. ஜெயபால், சென்னி மலை போலீஸ் இன்ஸ்பெ க்டர் சரவணன் மற்றும் சப்-இன்ஸ்பெ க்டர்கள், போலீ சார்கள் வரவே ற்றனர்.

    இதனை யடுத்து போலீஸ் நிலையத்தில் உள்ள வழக்கு குறித்த பதிவேடுகளை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆய்வு செய்தார்.

    அப்போது கடந்த 3 தினங்க ளுக்கு முன்பு ஈங்கூரில் தனியார் நிறுவன ஊழியரை கடத்தி சென்று ரூ.23 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்தும் போலீசாரிடம் கேட்டறி ந்தார்.

    அதேபோல் சென்னி மலை அருகே உப்பிலி பாளையம் பகுதியில் உள்ள தோட்டத்தில் வீட்டு வாசலில் தூங்கி கொண்டி ருந்த விவசாயி மற்றும் அவரது மனைவி ஆகி யோரை மர்ம நபர்கள் தாக்கி நகைகளை கொ ள்ளை யடித்து சென்றனர்.

    இதில் விவசாயி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இந்த கொலை யாளிகள் குறித்து ஒரு வருடம் ஆகியும் போலீசா ருக்கு இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    அதனால் சம்பவம் நடந்த இடத்திற்கும் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் நேரில் சென்று பார்வை யிட்டார்.

    • வைகாசி மாத சுபமுகூர்த்த தினம் என்பதால் 9 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.
    • கோவில் முழுவதும் நாதஸ்வர மங்கள இசை முழங்கியப்படி இருந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலையில் புகழ் பெற்ற முருகன் கோவில் உள்ளது. மலை மேல் அமைந்துள்ள இக்கோவிலில் சுபமுகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடந்து வருகிறது.

    இந்நிலையில் இன்று வைகாசி மாத சுபமுகூர்த்த தினம் என்பதால் சென்னிமலை முருகன் கோவிலில்  9ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.

    இதனால் அதிகாலையில் இருந்தே கோவிலில் உறவினர்கள் கூட்டம் அலைமோதியது. 9 திருமணம் நடந்ததால் கோவில் முழுவதும் நாதஸ்வர மங்கள இசை முழங்கியப்படி இருந்தது.

    திருமணம் முடிந்ததும் மணமக்கள் ேகாவிலை சுற்றி வந்து முருகன் சாமியை தரிசனம் செய்தனர்.

    பின்னர் அவர்கள் உறவினர்களுடன் போட்டோ எடுத்து கொண்டனர். கோவில் வளாகம் முழுவதும் திருமண கோஷ்டியினர் அதிகளவில் வந்திருந்தனர்.

    திருமணத்தில் கலந்து கொள்ள உறவினர்கள் அதிகளவில் வந்ததால் மலை மீது அவர்கள் வந்த வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்பட்டு இருந்தது.

    • நொய்யல் ஆற்றங்கரையிலுள்ள கொடுமணல் கிராமத்தில் “பெரும்வெளிர்’ இனத்தவர் வாழ்ந்தனர்.
    • இவர்கள், பண்ணையக்காரர்களிடம் மாடு மேய்க்கும் வேலைபார்த்தனர்.

    கந்தசஷ்டி கவசம் அரங்கேறிய தலம், ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில். இங்குள்ள முருகனை வணங்கினால் பிறந்த பயனை அடைய முடியும் என்ற நம்பிக்கையுள்ளது.

    தல வரலாறு:

    நொய்யல் ஆற்றங்கரையிலுள்ள கொடுமணல் கிராமத்தில் "பெரும்வெளிர்' இனத்தவர் வாழ்ந்தனர். இவர்கள், பண்ணையக்காரர்களிடம் மாடு மேய்க்கும் வேலைபார்த்தனர். ஒரு காராம்பசுவின் மடியில் தினமும் பால் இல்லாமல் இருந்ததை, ஒரு வேலையாள் கவனித்து பண்ணையாரிடம் கூறினார். மாடு ஒரு குறிப்பிட்ட இடத்தில், மடியில் இருந்த பால் முழுவதையும் தானாகவே சொரியவிட்டதை பண்ணையார் கவனித்தார். அந்த இடத்தைத் தோண்டியபோது, ஒரு சிலை கிடைத்தது. அதன் முகம் பொலிவுடன் இருந்தாலும், இடுப்புக்கு கீழ் சரியான வேலைப்பாடின்றி இருந்தது. அக்குறையைப்போக்க அந்தப் பகுதியை சிற்பியைக் கொண்டு உளியால் வேலையைத் துவக்கினார். உளிபட்ட இடத்தில் ரத்தம் பீறிட்டது. பணியை நிறுத்திவிட்டனர். "ஆண்டவர் அப்படியே இருக்க பிரியப்படுகிறார்", என்று சென்னிமலையின் மேல் பிரதிஷ்டை செய்தனர். இவருக்கு "தண்டாயுதபாணி" என்ற திருநாமம் இட்டனர்.

    தம்பிக்கு முதல் பூஜை:

    எல்லா கோவில்களிலும் விநாயகருக்கு முதல் பூஜை உண்டு. இங்கோ மூலவர் முருகனுக்கு நைவேத்ய பூஜை முடிந்த பின்பே, சந்நிதி விநாயகருக்கு பூஜை செய்யப்படும். முருகன் ஞானப்பழத்தால் கோபித்து வந்து மலைமேல் வீற்றிருப்பதால், அவரை சாந்தப்படுத்தும் வகையில் தொன்று தொட்டு இவ்வாறு நடக்கிறது. பங்குனி உத்திர திருவிழாவுக்கென தனித்தேர் உள்ளது. நொய்யல் ஆறு, சென்னிமலையிலிருந்து 3 கி.மீ., தூரத்தில் ஓடுகிறது. கோவிலின் தென்புறம் உள்ள மாமாங்க தீர்த்தம், கோடையிலும் பொங்கி வழியும். அருணகிரிநாதர் திருப்புகழ் பாடி மகிழ்வித்து முருகப்பெருமானிடம் படிக்காசு பெற்ற தலம்.

    கந்தசஷ்டி கவசம் அரங்கேற்றம்:

    "துதிப்போர்க்கு வல்வினைப்போம், துன்பம்போம், நெஞ்சிற் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும், நிஷ்டையும் கைகூடும் நிமலன் அருள் கந்தசஷ்டி கவசம் தனை" என்று முருக பக்தர்கள் மனம் உருகி பாடும் கந்தசஷ்டி கவசத்தை இயற்றிய பாலன் தேவராய சுவாமிகள், காங்கேயத்தை அடுத்த மடவிளாகத்தைச் சேர்ந்தவர். இவர் மைசூர் தேராச உடையாரின் காரியஸ்தர். கவசத்தை அரங்கேற்றம் செய்ய வேண்டிய இடம், சென்னிமலை தான் என்பதை முருகனின் அருளாணையால் உணர்ந்தார். அதன்படி அங்கே அரங்கேற்றினார். "சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக" என்ற புகழ்மிக்க வரியை அதில் எழுதியுள்ளார். "சிரம்" , "சென்னி" என்ற வார்த்தைகள் தலையைக் குறிக்கும். மலைகளில் தலையாயது சென்னிமலை என அவர் போற்றியுள்ளார். அடிவாரத்திலுள்ள நஞ்சுண்டேஸ்வரர், பட்டாலி பால்வெண்ணீஸ்வரர் கோவில்கள் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக உள்ளன.

    • சென்னிமலை காமாட்சி அம்மன் பொங்கல் விழா வருகிற 18-ந் தேதி நடக்கிறது.
    • ஆண்களும், பெண்களும் பய பக்தியுடன் பால் குடங்களை சுமந்து வந்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை காமாட்சி அம்மன் பொங்கல் விழா வருகிற 18-ந் தேதி நடக்கிறது. அதை முன்னிட்டு விழா கடந்த 10-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

    இன்று காலை 7 மணிக்கு பால் குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு சென்னிமலை நான்கு ரத வீதிகளில் மேளதாளத்துடன் ஊர்வலமாக வலம் வந்து காமாட்சி யம்மன் கோவிலையடைந்தது.

    இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் பய பக்தியுடன் பால் குடங்களை சுமந்து வந்தனர். பால் குடங்கள் கோவிலை அடைந்த பின்பு காமாட்சி யம்மனுக்கு பால் அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

    பின்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத்தொடர்ந்து நாளை மறுநாள் (செவ்வாய்க்கி ழமை) மாலை 6 மணிக்கு கும்பம் பாலித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

    17-ந் தேதி காமாட்சியம்மன் மாவிளக்கு க்குடன் திருவீதி களில் பவனி வந்து தீபாராதனை நடக்கிறது. 18-ந் தேதி வியாழன் காலை 6 மணிக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

    அன்று மாலை 3 மணிக்கு மேலப்பாளையம், மாதேஸ்வரநகரில் இருந்து அலகு தேர் ஊர்வலமாக புறப்பட்டு திருக்கோவிலை வந்துசேரும்.

    மாலை 4 மணிக்கு களத்துக்காட்டில் இருந்து மாவிளக்கு ஊர்வ லம் புறப்பட்டு ஜென்டை மேளம் முழங்க கோவிலை வந்தடையும். 19-ந் தேதி இரவு 7 மணிக்கு மஞ்சள் நீர், மறு பூஜை உடன் விழா நிறைவு பெறுகிறது.

    • பக்தர்கள் நதிகளுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர்.
    • சென்னிமலை மலை கோவிலை 16 கிலோ மீட்டர் சுற்றி கிரிவலம் வருகின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் அக்னி நட்சத்திர விழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் 40-வது ஆண்டாக கடந்த 11-–ந் தேதி அடிவாரத்தில் உள்ள இடும்பன் கோவிலில் விசேஷ அபிஷேகத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது.

    இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாட்டு மன்ற நிர்வாகி சுப்புசாமி தலைமையில் கங்கை, யமுனை, சரஸ்வதி, சிந்து, கிருஷ்ணா, கோதாவரி, தாமிரபரணி, காவிரி ஆகிய நதிகளுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர்.

    பிறகு இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்னிமலை மாரியம்மன் கோவிலில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு சப்த நதி தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு சென்னிமலை மலை கோவிலை 16 கிலோ மீட்டர் சுற்றி கிரிவலம் வருகின்றனர். இவர்கள் இரவு மலைமீதுள்ள முருகன் கோவிலை வந்தடைந்தடைவர்.

    மேலும் இன்று காலை 9 மணிக்கு சென்னிமலை மலை மீதுள்ள முருகன் கோவிலில் கணபதி ஹோமம் மற்றும் பூர்ணாகுதி, முதல்கால வேள்வி பூஜை, தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.

    முக்கிய நிகழ்ச்சியாக முருகப்பெருமானுக்கு சப்தநதி தீர்த்த அபிஷேகம், 1008 கலச அபிஷேகம் மற்றும் மழை வேண்டி மகா வருண ஜெப ஹோமம் ஆகியவை நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் நடைபெறுகிறது. பிறகு பகல் 12 மணிக்கு மேல் மகா தீபாராதனையும் அதைத்தொடர்ந்து உற்சவமூர்த்தி புறப்பாடும் நடைபெறுகிறது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றத்தினர் செய்து வருகின்றனர்.

    • புதியதாக பக்தர்கள் காத்திருப்பபு கூடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
    • அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பணியினை தொடங்கி வைத்தார்.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவில் மலை அடிவார த்தில் பஸ்சில் செல்லும் பக்தர்கள் வரிசையாக நிற்க காத்திருப்பு கூடம் கட்டும் பணியை செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் தொடங்கி வைத்தார்.

    சென்னிமலை முருகன் கோவிலுக்கு வந்து மலை கோவிலுக்கு பஸ்சில் செல்லும் பக்தர்கள் வரிசையாக நிற்கவும், காத்திருக்கவும் காத்திருப்பு கூடம் மலை அடிவாரத்தில் அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறையின் சார்பாக கோவில் நிதி ரூ. 64 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக பக்தர்கள் காத்திருப்பபு கூடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

    இதையொட்டி சென்னி மலை முருகன் கோவில் மலை அடிவாரத்தில் பக்தர்கள் காத்திருப்பபு கூடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. விழாவிற்கு கலெக்டர் கிருஷ்ண ண்னுண்ணி தலைமை தாங்கினார்.

    இதில் தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு பணியினை தொடங்கி வைத்தார்.

    விழாவில் திருப்பூர் 4-ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், மாவட்ட கவுன்சிலர் எஸ். ஆர்.எஸ்.செல்வம், யூனியன் துணை தலைவர் பன்னீர் செல்வம், பேரூராட்சி தலைவர் ஸ்ரீ தேவி அசோக், சென்னிமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் பிரபு, நகர செயலாளர் ராமசாமி, கோவில் செயல் அலுவலர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நடைபெற்றது.
    • காணிக்கையாக ரூ.59 லட்சத்து 58 ஆயிரத்து ௧௯௧ செலுத்தி இருந்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த வைக்கப்பட்டு இருந்த உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நடை பெற்றது.

    திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் கோவில் உதவி ஆணையரும், செயல் அலுவலருமான ரமணி காந்தன் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.

    இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.59 லட்சத்து 58 ஆயிரத்து 191 ரூபாய் செலுத்தி இருந்தனர். மேலும் தங்கம் 291 கிராமும், வெள்ளி 6 கிலோ 152 கிராமும் காணிக்கையாக இருந்தது.

    உண்டியல் திறப்பில் சென்னிமலை முருகன் கோவில் செயல் அலுவலர் ஏ.கே.சரவணன், கோபி சரக ஆய்வர் ஹரி மற்றும் நந்தா பொறியியல் கல்லூரி மற்றும் எம்.பி.என்.எம்.ஜே பொறியியல் கல்லூரி மாணவர்கள், பக்தர்கள், கோவில் பணியாளர்கள், அர்ச்சக ர்கள் ஈடுபட்டனர்.

    ×