திருமங்கலம் அருகே பெண் குத்திக்கொலை- கணவரிடம் தீவிர விசாரணை
பேரையூர்:
திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி அருகே உள்ள சத்திரப்பட்டியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன் விவசாயி. இவரது மனைவி மாரியம்மாள் (வயது 37). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சத்திரப்பட்டி பகுதியில் உள்ள இவர்களது தோட்டத்தில் மாரியம்மாள் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து உடனடியாக டி.கல்லுப்பட்டி போலீசாருக்கு பரமேஸ்வரன் தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து மாரியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பரமேஸ்வரன் தன்னுடைய மனைவியை தனது சகோதரர் சொத்துப் பிரச்சினை காரணமாக கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக போலீசிடம் புகார் கொடுத்துள்ளார்.
போலீஸ் விசாரணையில் கணவன்-மனைவிக்கு இடையே தகராறில் பரமேஸ்வரனே மனைவியை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.