செய்திகள்

தூங்க இடம் பிடிக்கும் தகராறில் கல்லால் அடித்து தொழிலாளி கொலை- நண்பர்கள் 2 பேர் கைது

Published On 2019-01-24 09:43 GMT   |   Update On 2019-01-24 09:43 GMT
மாதவரம் ரவுண்டானா அருகே தூங்க இடம் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நண்பர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாதவரம்:

சென்னை, கொண்டித்தோப்பு சுந்தரம்பிள்ளை 2-வது தெருவில் வசித்து வந்தவர் கோவிந்தராஜ் (வயது 58).

மாதவரம் ரவுண்டானா அருகே உள்ள லாரி புக்கிங் அலுவலகத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இரவு நேரத்தில் வேலை முடிந்ததும் கோவிந்தராஜ் அங்குள்ள எடைமேடை அருகே தூங்குவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று இரவு அவர் வேலை முடிந்ததும் மாதவரம் ரவுண்டானா அருகே உள்ள ஒரு எடை மேடை அருகே தூங்க சென்றார்.

சிறிது நேரம் கழித்து மற்ற தொழிலாளர்கள் அங்கு சென்றபோது கோவிந்தராஜ் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலை முழுவதும் கல்லால் தாக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து மாதவரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர்கள் பாக்யராஜ், நாகேஸ்வரராவ் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது கோவிந்த ராஜை உடன் வேலை பார்த்த நண்பர்களான மாதவரத்தை சேர்ந்த தொழிலாளிகள் சுரேஷ், அன்பழகன் ஆகிய 2 பேர் கல்லால் அடித்து கொலை செய்து இருப்பது தெரிந்தது.

தலைமறைவாக இருந்த அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இரவில் தூங்குவதற்கு இடம் பிடித்தபோது ஏற்பட்ட தகராறில் கோவிந்தராஜை கல்லால் அடித்து கொன்றதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து கைதான 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Tags:    

Similar News