செய்திகள்

அரூர் அருகே மூதாட்டி மர்ம மரணம்- போலீசார் விசாரணை

Published On 2019-01-20 14:40 GMT   |   Update On 2019-01-20 14:40 GMT
அரூர் அருகே வீட்டில் மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரை யாராவது அடித்துக் கொன்றனரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தருமபுரி:

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள தீர்த்தமலையை அடுத்த ஆண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மனைவி கெங்கம்மாள் (வயது 65). இவர்களுக்கு பழனியம்மாள் என்ற மகள் உள்ளார். ராஜமாணிக்கம் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

பழனியம்மாள் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் கெங்கம்மாள் நேற்று காலை வீட்டின் உள்ள ஆடுகளை அடைத்து வைக்கும் பட்டியின் அருகே தலை, மார்பு, கழுத்து ஆகிய பகுதிகளில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். 

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனே மகள் பழனியம்மாளுக்கு தகவல் கொடுத்தனர். அவர் சம்பவ இடத்துக்கு வந்து கெங்கம்மாளின் உடலை பார்த்து கதறி அழுதார்.

இதுகுறித்து பழனியம்மாள் கோட்டப்பட்டி போலீசாரிடம் புகார் தெரிவித்தார். போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து கெங்கம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவுக்கு பிறகு தான் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

கெங்கம்மாளை முன் விரோதம் காரணமாக யாராவது அடித்து கொன்றனரா? அல்லது மர்ம நபர்கள் கெங்கம்மாளை அடித்து கொன்றுவிட்டு உடலை வீசி சென்றனரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்திலும் அவரது உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News