குழித்துறை விபத்தில் படுகாயம் அடைந்த 4 வயது சிறுவன் பலி
நாகர்கோவில்:
திருவட்டார் அருகே பிலாங்காலை பகுதியைச் சேர்ந்தவர் புல்பாஸ், (வயது 38). இவர் ஒர்க்ஷாப் வைத்துள்ளார். இவரது மனைவி மேரி ஜெலஸ்டின் (32). இவர்களது மகள் அக்ஷ்யா (10), மகன் அக்ஷித் (4).
இவர்கள் 4 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் பொங்கலுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றனர். குழித்துறை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் புல்பாஸ், மேரி ஜெலஸ்டின், அக்ஷ்யா, அக்ஷித் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் 4 பேரும் படுகாயம் அடைந்தனர். மேரி ஜெலஸ்டினுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. சிறிது நேரத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்து பற்றி தகவல் அறிந்ததும், களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான மேரி ஜெலஸ்டின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயம் அடைந்த மற்ற 3 பேரையும் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அக்ஷித் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. விபத்து குறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.