சேலம் சூரமங்கலத்தில் பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு
சேலம்:
சேலம் ரெட்டியூர் அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் நாகலெட்சுமி (வயது 58). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் அவர் அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நாகலெட்சுமி திருடன்...திருடன்... என்று சத்தம் போட்டார். உடனே சுதாரித்துக் கொண்ட மர்ம நபர்கள் பறித்த செயினுடன் மோட்டார் சைக்கிளில் அதே வேகத்தில் தப்பினர்.
இதனால் கதறி அழுது புரண்ட நாகலெட்சுமி சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
ஏற்கனவே கடந்த 10 நாட்களுக்கு முன்பு சேலம் மாநகரில் சூரமங்கலம், அழகாபுரம், கன்னங்குறிச்சி ஆகிய 3 இடங்களில் ஒரே நாளில் 3 பெண்களிடம் செயின் பறித்த நிலையில் தற்போது நடந்த இந்த செயின் பறிப்பு சம்பவம் பெண்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.