செய்திகள்
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்- ஒருவர் பலி
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் சிறுவன் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தை சேர்ந்தவர் ரெங்கராஜ் (வயது 49). இவரும், அதே பகுதியை சேர்ந்தவரான கண்ணன் மகன் மாணிக்கமும்(15) நேற்று முன்தினம் துறையூர் சென்றுவிட்டு, மோட்டார் சைக்கிளில் மீண்டும் செட்டிக்குளத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது சிறுவயலூரில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மோதியது. 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ரெங்கராஜ், மாணிக்கம் மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த சிறுவயலூரை சேர்ந்த ஹரிகிருஷ்ணன்(50), மணி(70) ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர்.
இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஹரிகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.