அழகப்பன் நகரில் போலீஸ் போல் நடித்து பெண்ணிடம் 8 பவுன் மோசடி
மதுரை:
மதுரை அழகப்பன் நகர் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி முத்து ராக்கு (வயது 55). இவர் அந்தப்பகுதியில் நடந்து சென்றபோது 2 மர்ம வாலிபர்கள் முத்துராக்குவிடம் நைசாக பேச்சு கொடுத்தனர். இந்தப்பகுதியில் அடிக்கடி திருட்டு நடக்கிறது.
எனவே நீங்கள் அணிந்திருக்கும் நகையை கொடுங்கள், பத்திரமாக மடித்து தருகிறோம் என்று கூறினர்.
இதை நம்பிய முத்துராக்கு, தான் அணிந்திருந்த 8 பவுன் தங்க தாலிச்செயினை அவர்களிடம் கொடுத்தார். அதை வாங்கிய 2 வாலிபர்களும் ஒரு காகிதத்தில் வைத்து பொட்டலமாக மடித்துக் கொடுத்தனர்.
வீடு திரும்பிய முத்து ராக்கு பொட்டலத்தை பிரித்து பார்த்த போது அதில் காகிதங்கள் சுற்றி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த முத்து ராக்கு இது குறித்து சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம வாலிபர்களை தேடி வருகிறார்கள்.
இதேபோல் மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்த கருப்பையா மனைவி பாண்டியம்மாள் (வயது 45). இவர் ஆரப்பாளையத்தில் இருந்து எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்துக்கு டவுன் பஸ்சில் சென்றார்.
கோரிப்பாளையம் அருகில் சென்றபோது பாண்டியம்மாள் வைத்திருந்த மணிபர்சை யாரோ அபேஸ் செய்து விட்டனர். அதில் அவர் 7 பவுன் தங்க தாலிச்செயினை வைத்திருந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.