செய்திகள்

செந்தில் பாலாஜி ஒருநாள் நட்சத்திரம்- அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

Published On 2018-12-14 07:42 GMT   |   Update On 2018-12-14 07:42 GMT
தி.மு.க.வை நோக்கி செல்பவர்கள் ஒரு நாள் நட்சத்திரமாக தான் இருக்க முடியும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். #SenthilBalaji #Jayakumar #DMK
ராயபுரம்:

பழைய வண்ணாரப்பேட்டை, பார்த்தசாரதி தெருவில் புதிதாக ரூ.2 கோடி செலவில் கட்டப்படும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

செந்தில் பாலாஜி தி.மு.க.வில் இணைவது, தி.மு.க.வின் பலவீனத்தை காட்டுகிறது. அவர் ஏற்கனவே தி.மு.க.வில் இருந்து வந்தவர் தான். உண்மையான அ.தி.மு.க. இரத்தம் உள்ளவர்கள் தி.மு.க.வில் இணைய வாய்ப்பு இல்லை.

தி.மு.க.வில் இணைவது கடலில் கரைக்கும் பெருங்காயம் போல. அதனால் எந்த பயனும் இல்லை, தி.மு.க.வை நோக்கி செல்பவர்கள் ஒரு நாள் நட்சத்திரமாக தான் இருக்க முடியும்.

செந்தில் பாலாஜி தான் சென்றுள்ளார். அவருடன் இருந்த பலர் அ.தி.மு.க.வில் தான் உள்ளனர். அ.தி.மு.க.விற்கு எந்த பாதிப்பும் இல்லை.


தினகரன் ஒரு எடுபடாத பிராண்டு, தி.மு.க. ஒரு எடுபடாத பிராண்டு. இந்த இரண்டாலும் ஒன்றும் புண்ணியம் இல்லை.

வர இருக்கும் புயலால் மீனவர்களுக்கு பாதிப்பு இல்லை. ஆழ்கடல் மீனவர்கள் கரை திரும்பி விட்டனர். மீதம் உள்ளவர்களை அருகாமையில் இருக்கும் துறைமுகங்களுக்கு செல்ல அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

தினகரன் ‘ஹை வோல்டேஜ்’ மின்கம்பி என்றால் அது அவருக்கே ஆபத்தானது. 230 ஓல்ட் மட்டுமே பயன்படுத்த பாதுகாப்பான ஒன்று. அவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.  #SenthilBalaji #Jayakumar #DMK
Tags:    

Similar News