செய்திகள்

கூடலூர் அருகே தோட்டங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்

Published On 2018-12-04 10:12 GMT   |   Update On 2018-12-04 10:12 GMT
கூடலூர் அருகே தோட்டங்களுக்குள் புகுந்து இலவ மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி சென்றதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கூடலூர்:

தேனி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள லோயர்கேம்ப் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் வாழை, தென்னை, மா, இலவ மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளதால் அடிக்கடி மான், யானை, காட்டுப்பன்றி, குரங்குகள் ஆகியவை தோட்டத்தில் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் தங்கள் நிலங்களை பாதுகாக்க வேலி மற்றும் அகழிகள் அமைத்துள்ளனர்.

குறிப்பாக நாயக்கர் தொழு, எள்கரடு, பளியங்குடி ஆகிய பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகம் இருக்கும் என்பதால் அங்கு மட்டும் அகழிகள் கூடுதலாக அமைக்கப்பட்டன. ஆனால் தற்போது அகழிகளில் மண் மேவி காணப்படுவதால் மீண்டும் யானைகள் வலம் வரத் தொடங்கி உள்ளது.

நேற்று நாயக்கர் தொழு, சரளைமேடு பகுதியில் பெருமாயி (வயது48) என்பவருக்கு சொந்தமான இலவ மரத்திற்குள் புகுந்த யானைகள் அங்கிருந்த மரங்களை வேறுடன் சாய்த்து சேதப்படுத்தியது. அதிகாலையில் எழுந்து பார்த்த பெருமாயி மற்றும் அப்பகுதி விவசாயிகள் யானைகளின் அட்டகாசத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

கடந்த சில நாட்களாக யானைகள் இடம்பெயர்வது குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அட்டகாசம் செய்திருப்பதால் வனத்துறையினருக்கு புகார் அளித்துள்ளனர். வனத்துறையினர் பார்வையிட்டு மீண்டும் யானைகள் வராமல் இருக்க முகாமிட்டு உள்ளனர்.

Tags:    

Similar News