search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "garden entry elephant"

    கூடலூர் அருகே இரவில் வீடுகளை முற்றுகையிடும் காட்டு யானையால் கிராம மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
    கூடலூர்:

    கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. வாழை, பாக்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கூடலூர் அருகே மரப்பாலம் சீனக்கொல்லி கிராமத்துக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு காட்டு யானை நுழைந்தது.

    பின்னர் அது பொதுமக்களின் வீடுகளை முற்றுகையிட்டது. இதனால் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். மேலும் அவசர தேவைகளுக்காக வெளியே வர முடியாமல் சிரமப்பட்டனர்.

    இந்த நிலையில் இரவு முழுவதும் அப்பகுதியில் நின்றிருந்த காட்டு யானை அங்கு பயிரிட்டு இருந்த வாழை, பாக்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் நின்றிருந்த காட்டு யானை நேற்று விடியற்காலையில் வனப்பகுதிக்கு சென்றது. அதன்பின்னரே கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, காட்டு யானை அடிக்கடி ஊருக்குள் வருவதால் பாதுகாப்பற்ற சூழல் காணப்படுகிறது. எனவே வனத்துறையினர் கூடுதல் கண்காணிப்பு மேற்கொண்டு காட்டு யானை வராமல் தடுக்க வேண்டும் என்றனர்.

    இதேபோல் கூடலூர் ஹெல்த்கேம்ப், அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளிட்ட பகுதியில் தினமும் இரவு காட்டு யானை வந்து வீடுகளை முற்றுகையிட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் நிம்மதியாக தூங்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

    சில சமயங்களில் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூட வளாகத்தில் காட்டு யானை நின்று வருகிறது. இன்னும் 1 வாரத்தில் பள்ளிக்கூடம் திறக்க உள்ள நிலையில் காட்டு யானை வருகையால் மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    எனவே வனத்துறையினர் காட்டு யானை வராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹெல்த்கேம்ப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    கூடலூர் அருகே வாழைத் தோட்டத்தை யானைகள் நாசம் செய்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. சுரங்கனாறு நீர் வீழ்ச்சி, வெட்டுக்காடு, பளியங்குடி உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் வாழை, தென்னை, கரும்பு மற்றும் மானாவாரி பயிர்களை பயிரிட்டுள்ளனர்.

    இதனையொட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து காட்டுப்பன்றி, காட்டெருமை, யானை உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி விளை நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அகழிகள் வெட்டப்பட்டு சோலார் மின் வேலி அமைக்கப்பட்டது.

    ஆனால் தற்போது அவை பராமரிக்கப்படாததால் வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகள், விளை நிலங்களில் புகுவது தொடர் கதையாகி வருகிறது.

    வெட்டுக்காடு சில்ராம படுகை பகுதியில் உள்ள பேச்சியம்மாள் என்பவருக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் செவ்வாழை பயிரிட்டுள்ளார். தற்போது அவை தார் வெட்டும் பருவத்தில் இருந்துள்ளது. இங்கு புகுந்த யானை கூட்டம் வாழைகளை நாசம் செய்தன.

    இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த சில நாட்களாகவே யானைகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே இரவு நேர காவலுக்கு செல்ல விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

    இப்பகுதியில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவ்வாழைகளை யானைக் கூட்டம் சேதப்படுத்தியது. பல்வேறு இன்னல்களுக்கு இடையே விவசாயம் செய்து வரும் எங்களுக்கு இது மேலும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. விவசாய நிலங்களை சுற்றி அகழி அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் நிரந்தரமாக விரட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு தீர்வு காண வேண்டும். நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

    கூடலூர் அருகே தோட்டங்களுக்குள் புகுந்து இலவ மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி சென்றதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள லோயர்கேம்ப் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் வாழை, தென்னை, மா, இலவ மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

    வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளதால் அடிக்கடி மான், யானை, காட்டுப்பன்றி, குரங்குகள் ஆகியவை தோட்டத்தில் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் தங்கள் நிலங்களை பாதுகாக்க வேலி மற்றும் அகழிகள் அமைத்துள்ளனர்.

    குறிப்பாக நாயக்கர் தொழு, எள்கரடு, பளியங்குடி ஆகிய பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகம் இருக்கும் என்பதால் அங்கு மட்டும் அகழிகள் கூடுதலாக அமைக்கப்பட்டன. ஆனால் தற்போது அகழிகளில் மண் மேவி காணப்படுவதால் மீண்டும் யானைகள் வலம் வரத் தொடங்கி உள்ளது.

    நேற்று நாயக்கர் தொழு, சரளைமேடு பகுதியில் பெருமாயி (வயது48) என்பவருக்கு சொந்தமான இலவ மரத்திற்குள் புகுந்த யானைகள் அங்கிருந்த மரங்களை வேறுடன் சாய்த்து சேதப்படுத்தியது. அதிகாலையில் எழுந்து பார்த்த பெருமாயி மற்றும் அப்பகுதி விவசாயிகள் யானைகளின் அட்டகாசத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    கடந்த சில நாட்களாக யானைகள் இடம்பெயர்வது குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அட்டகாசம் செய்திருப்பதால் வனத்துறையினருக்கு புகார் அளித்துள்ளனர். வனத்துறையினர் பார்வையிட்டு மீண்டும் யானைகள் வராமல் இருக்க முகாமிட்டு உள்ளனர்.

    ×