செய்திகள்
ஆண்டிப்பட்டி அருகே மாட்டு வண்டியில் மணல் திருட்டு
ஆண்டிப்பட்டி அருகே மாட்டு வண்டியில் மணல் திருடியவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி பகுதியில் வைகை ஆற்றில் மணல் திருடுவது வாடிக்கையாக கொண்டுள்ளனர். போலீசார் அவ்வப்போது அவர்களை பிடித்து அபராதம் விதித்தபோதும் மணல் திட்டு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இதனால் வைகையாற்று பகுதியை சுற்றியுள்ள ஊர்களில் நீர் ஆதாரம் குறைவதோடும், மண் வளம் சுரண்டப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் அடிக்கடி புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
க.விலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் வைகை ஆற்றுப்பாலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அமச்சியாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் கருப்பசாமி (வயது24) மற்றும் மீராரு (28) மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து மணல் கடத்திய மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து அவர்களையும் கைது செய்தனர்.