செய்திகள்

சாத்தூர் அருகே வாலிபர் எரித்துக் கொலை

Published On 2018-12-01 09:48 GMT   |   Update On 2018-12-01 09:48 GMT
தனியார் பம்புசெட்டில் கருகிய நிலையில் வாலிபர் உடல் மீட்கப்பட்டது. அவர் எரித்துக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

சாத்தூர்:

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ளது கத்தாளம்பட்டி பஞ்சாயத்து. இங்குள்ள ஆலம்பட்டி விலக்கு அருகே அணைக்கரை பட்டியை சேர்ந்த அழகர் என்பவருக்கு தோட்டமும், பம்புசெட்டும் உள்ளது.

இன்று காலை அங்கு சென்றவர்கள் மோட்டார் அறையில் கருகிய நிலையில் ஆண் உடல் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அம்மாபட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

எரிந்த நிலையில் கிடந்த வருக்கு 40 முதல் 45 வயது இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். மேலும் சம்பவம் நடந்து 4 நாட்களுக்கு மேலாக இருக்கும் என தெரிகிறது.

அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. மேலும் அவரை யாராவது கடத்தி வந்து எரித்துக்கொலை செய்தார்களா? அல்லது தீக்குளித்து தற்கொலை செய்தாரா? என தெரிய வில்லை. சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து அம்மாபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News