செய்திகள்
கொலை செய்யப்பட்ட ராமச்சந்திரன், வினோத்

ஏரல் அருகே பரபரப்பை ஏற்படுத்திய இரட்டைக்கொலை வழக்கில் மேலும் 2 பேர் சரண்

Published On 2018-11-28 12:06 GMT   |   Update On 2018-11-28 12:06 GMT
ஏரல் அருகே இரட்டைக்கொலை தொடர்பான வழக்கில் 2 வாலிபர்கள் கிராம நிர்வாக அதிகாரியிடம் சரணடைந்தனர்.
ஏரல்:

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பேட்மாநகரம் வீரன் சுந்தரலிங்கம் நகர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் வினோத் (வயது 28). பிரபல ரவுடியான இவர் கடந்த 23-ந்தேதி இரவில் ஏரல் அருகே மேலமங்களகுறிச்சி தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள சுடுகாட்டு பகுதியில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் வினோத் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தின் அருகில் தாமிரபரணி ஆற்றில், நேற்று முன்தினம் குரும்பூர் அருகே கல்லாம்பாறையைச் சேர்ந்த ராமச்சந்திரன் (22) உடலில் பலத்த வெட்டுக்காயங்களுடன் பிணமாக மிதந்தார். இவரும், வினோத்தும் நண்பர்கள்.

வினோத் கொலை செய்யப்பட்ட நாளில் இருந்து ராமச்சந்திரனும் மாயமானது தெரியவந்தது. வினோத்தும், ராமச்சந்திரனும் ஒரே நாளில் கொலை செய்யப்பட்டது, போலீசாரின் விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து இரட்டைக்கொலை வழக்காக போலீசார் மாற்றி பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் வினோத், ராமச்சந்திரன் ஆகிய 2 பேரையும் கொலை செய்ததாக, மேலமங்களகுறிச்சி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த துரைமுத்து என்ற ராஜா (26), அவருடைய மைத்துனர் முத்துமுருகன் (26) ஆகிய 2 பேரும் ஸ்ரீவைகுண்டம் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியத்திடம் சரண் அடைந்தனர்.

2 பேரையும் அவர் ஏரல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து ராஜா, முத்துமுருகன் ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

கைதான ராஜா, முத்துமுருகன் ஆகிய 2 பேரையும் போலீசார் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர். இரட்டைக்கொலைக்கு பயன்படுத்திய 2 அரிவாள்களையும் போலீசார் கைப்பற்றினர்.

இரட்டை கொலையில் தலைமறைவான தனுஷ்கோடி, கண்ணன் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் தேடப்பட்டு வந்த கண்ணன், தனுஷ்கோடி ஆகிய இரண்டு பேரும் நேற்று மாலை ஏரல் சிறுதொண்டநல்லூர் கிராம நிர்வாக அதிகாரியிடம் சரணடைந்தனர். இதையடுத்து சரணடைந்த 2 பேரையும் ஏரல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். #tamilnews
Tags:    

Similar News