செய்திகள்

புயல் பாதித்த பகுதிகளில் தன்னார்வ அமைப்பு போல் அ.ம.மு.க. செயலாற்றுகிறது - தினகரன் பேட்டி

Published On 2018-11-25 08:56 GMT   |   Update On 2018-11-25 08:56 GMT
புயல் பாதித்த பகுதிகளில் தன்னார்வ அமைப்பு போல் அ.ம.மு.க. செயலாற்றுகிறது என்று டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Gajastorm #TTVDhinakaran

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டை, மகாதேவபட்டினம், கூப்பாச்சிக்கோட்டை, துளசேந்திரபுரம், பைங்காநாடு உள்ளிட்ட கிராம பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கஜா புயலால் பாதித்த மாவட்டங்களை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். கஜா புயலுக்கு இடைக்கால நிவாரணமாக மத்திய அரசு உடனடியாக ரூ.5 ஆயிரம் கோடி வழங்க வேண்டும். அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்லாமல் இருப்பதால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் போராட்ட களமாக மாறும் என்ற அச்சம் நிலவுகிறது.

தென்னை மரங்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.


ஒரு தாயைப்போல அரசாங்கம் இந்த மக்களை கவனித்தால் தான் இதுபோன்ற பேரழிவுகளில் இருந்து மக்களை மீட்டு இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வர முடியும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தஞ்சையில் முகாமிட்டு நிவாரண பணிகளை கவனிக்க வேண்டும். அப்படி செய்தால்தான் நிவாரண பணிகள் முழுவீச்சில் நடைபெற்று, மக்கள் பாதிப்பில் இருந்து விடுபட வழி வகுக்கும்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அரசியல் கட்சியை போன்று செயல்படாமல் ஒரு தன்னார்வ அமைப்பு போன்றுதான் புயல் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ், மாநில அமைப்பு செயலாளர் சிவா.ராஜமாணிக்கம், மாநில வக்கீல் பிரிவு செயலாளர் சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர். #Gajastorm #TTVDhinakaran

Tags:    

Similar News