பரமக்குடி எமனேசுவரம் வைகை ஆற்றில் மணல் திருட்டு- 4 பேர் கைது
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் வைகை ஆற்றில் சட்ட விரோதமாக மணல் கடத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் ஆற்றில் பல பகுதிகள் பள்ளங்களாக காட்சி அளிக்கிறது. எந்த வித வரைமுறையின்றி ஆற்று மணல் திருடப்பட்டு வருகிறது.
பரமக்குடி அருகே உள்ள எமனேசுவரம் வைகை ஆற்றில் மணல் திருட்டு நடப்பதாக கிராம நிர்வாக அதிகாரி இளங்கோவனுக்கு தகவல் கிடைத்தது.
அவர் எமனேசுவரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அங்குள்ள சுடுகாடு ஆற்றுப்பகுதியில் மணல் திருடிக்கொண்டிருந்த எமனேசுவரத்தை சேர்ந்த பூதாகர், சங்கர் (வயது 32), அர்ச்சுணன் (27), மணி கண்டன் (34) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து பதிவு செய்யப்படாத 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மணல் திருட்டு தொடர்பாக இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.