செய்திகள்

பாளையில் திருமணமாகாமலேயே கர்ப்பமான ஸ்ரீவைகுண்டம் நர்ஸ் மர்ம மரணம்

Published On 2018-11-20 13:19 GMT   |   Update On 2018-11-20 13:19 GMT
பாளையங்கோட்டையில் திருமணமாகாமலேயே கர்ப்பமான நர்ஸ் மர்மமான முறையில் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை:

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஸ்ரீமூலக்கரை கிராமத்தை சேர்ந்தவர் முனியன். இவரது மகள் மாரியம்மாள் (வயது23). இவர் பாளை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மகளிர் கருத்தறித்தல் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.

இதற்காக மாரியம்மாள் அந்த பகுதியிலேயே தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். இன்று அதிகாலை திடீரென்று மாரியம்மாளுக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டது. இதனால் அவருடன் தங்கியிருந்த மற்ற நர்சுகள் மாரியம்மாளை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரியம்மாள் பரிதாபமாக இறந்தார்.

மாரியம்மாளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் அவர் மரணத்திற்கான காரணத்தை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். மாரியம்மாள் திருமணமாகாமலேயே கர்ப்பமாக இருந்திருக்கிறார். அவர் நர்ஸ் என்பதால் அந்த கர்ப்பத்தை கலைக்க அவரே மாத்திரை சாப்பிட்டு சிகிச்சை பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில் கருகலைந்து மாரியம்மாள் உடல்நிலை மோசமடைந்து பலியானது தெரியவந்தது.

இந்த நிலையில் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த அவரது உறவினர்கள் மாரியம்மாள் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி வருகிறார்கள். இது தொடர்பாக பாளை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கர்ப்பத்தை கலைக்க மாரியம்மாள் தானாகவே மாத்திரை சாப்பிட்டாரா? அல்லது வேறு யாரேனும் கர்ப்பத்தை கலைக்க முயற்சி செய்ததில் பலியானாரா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் பாளை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
Tags:    

Similar News