செய்திகள்

திருவட்டாரில் வாகன சோதனை- சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய 2 வாலிபர்கள் கைது

Published On 2018-11-03 11:45 GMT   |   Update On 2018-11-03 11:45 GMT
திருவட்டாரில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருவட்டார்:

திருவட்டார், காங்கரை பகுதியில் நேற்று சப்- இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்தது. அதில் 2 வாலிபர்கள் இருந்தனர். மோட்டார் சைக்கிளை நிறுத்தும்படி போலீசார் சைகை காட்டியும் அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் கூச்சலிட்டபடி வேகமாக சென்றனர்.

உடனே போலீசார் அந்த மோட்டார் சைக்கிளை துரத்தி சென்றனர். திருவட்டார் பஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளை போலீசார் மடக்கி பிடித்தனர்.

பிடிப்பட்டவர்கள் குலசேகரம் பகுதியை சேர்ந்த பிரேம் விஜில் ராஜ் (வயது 33), இன்னொருவர் ஆற்றூரை சேர்ந்த மகேஷ் குமார் (31) என தெரியவந்தது.

அவர்களிடம் போலீசார் வாகனத்தை அதிவேகத்தில் ஓட்டி சென்றது ஏன்? என்று கேட்டு விசாரித்தனர். அப்போது வாலிபர்கள் இருவரும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் சத்திய சோபனையும் மிரட்டினர்.

இது பற்றி சப்-இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் திருவட்டார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வாலிபர்கள் பிரேம் விஜில் ராஜ், அவரது நண்பர் மகேஷ்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டல் விடுத்தது என பல்வேறு பிரிவுகளில் வழக்குபதிவு செய்தனர்.

கைதான பிரேம் விஜில் ராஜ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். விடுமுறையில் இப்போது ஊருக்கு வந்துள்ளார்.

Tags:    

Similar News