செய்திகள்

கோவை ஆடீஸ் வீதியில் காவலாளியை கொன்ற தொழிலாளி கைது

Published On 2018-10-06 11:46 GMT   |   Update On 2018-10-06 11:46 GMT
கோவை ஆடீஸ் வீதியில் காவலாளியை கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் ராமன் (வயது 56).

இவர் ஆடீஸ் வீதியில் உள்ள ஒரு தனியார் நிறுவன குடோனில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

கடந்த ஆண்டு மார்ச் 25-ந் தேதி இவர் குடோன் முன்பு ரத்தவெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.ரேஸ் கோர்ஸ் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

சம்பவத்தன்று நள்ளிரவு ராமனுக்கும், அதேபகுதியில் தங்கி வேலை பார்த்து வந்த எட்டிமடையை சேர்ந்த சந்திரன்(40) என்பவருக்கும் தகராறு நடந்தது தெரிய வந்தது. அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்கள் முன்பு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராகாட்சிகளை ஆய்வு செய்த போது சந்திரன் கல்லால் ராமனை தாக்குவது தெரிய வந்தது. எனவே சந்திரனை போலீசார் தேடிச் சென்ற போது அவர் தலைமறைவாகி விட்டார்.

இதையடுத்து சந்திரனின் செல்போன் எண் மூலம் தேடி வந்தனர். அவரது நண்பர்கள், உறவினர்களிடம் விசாரணை நடத்தியும் ராமன் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் 1½ வருடங்களுக்கு பிறகு சந்திரன் நேற்று கோவை ரெயில் நிலையம் வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று சந்திரனை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

சந்திரன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

சம்பவத்தன்று நான் மது குடிப்பதற்காக ராமனிடம் பணம் கேட்டேன். ஆனால் அவர் பணம் இல்லை என கூறி விட்டார். இதனால் ஆத்திரத்தில் அவரை கல்லால் தாக்கி கொலை செய்தேன். போலீசார் என்னை தேடுவதை அறிந்து கர்நாடகாவுக்கு தப்பித்துச் சென்று விட்டேன்.

கடந்த 1½ ஆண்டுகளாக அங்கு கூலி வேலை செய்து வந்தேன். தற்போது மழை காரணமாக வேலை இல்லாததால் ஊருக்கு திரும்பினேன். அப்போது போலீசாரிடம் சிக்கிக் கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார். கைதான சந்திரனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News