வடசேரியில் கஞ்சா-லாட்டரி சீட்டு வைத்திருந்த 3 பேர் கைது
நாகர்கோவில்:
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு குமரி மாவட்டத்தில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கடந்த சில நாட்களாக லாட்டரிசீட்டு விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
நேற்றும் போலீசார் வடசேரி கிருஷ்ணன் கோவில் சந்திப்பு பகுதியில் வரும்போது அங்கு 2 பேர் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் அதே பகுதியை சேர்ந்த அன்புகுமரன் (வயது 43), சுரேஷ் (40) என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் அவர்கள் லாட்டரிசீட்டு விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த பணம் மற்றும் 12 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் வடசேரி ஆம்னிபஸ் நிலையம் அருகே இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் ரோந்து சென்றார். அப்போது அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் மேல கலுங்கடியை சேர்ந்த கார்த்திக் (26) என்பதும், அவரை சோதனை செய்த போது அவர் வைத்திருந்த பையில் 1¼ கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.