செய்திகள்

அடுத்த பிரதமரை ஸ்டாலின்தான் முடிவு செய்வார் - திருச்சி சிவா பேட்டி

Published On 2018-09-25 05:49 GMT   |   Update On 2018-09-25 05:49 GMT
ஊட்டியில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி புகழ் வணக்க கூட்டத்தில் பங்கேற்ற திருச்சி சிவா, நாட்டின் அடுத்த பிரதமரை மு.க.ஸ்டாலின் தான் முடிவு செய்வார் என தெரிவித்தார். #Karunanidhi #MKStalin #TrichySiva
ஊட்டி:

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நீலகிரி மாவட்ட தி.மு.க. சார்பில் புகழ் வணக்க கூட்டம் ஊட்டியில் உள்ள ஒய்.டபிள்யு.சி.ஏ. அரங்கில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் முபாரக் தலைமை தாங்கினார். தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி. மற்றும் புலவர் ராமலிங்கம், கவிஞர் நந்தலாலா ஆகியோர் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த கருணாநிதி உருவப்படத்துக்கு நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர்.

பிறகு திருச்சி சிவா எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி ஒரு சகாப்தம். அவர் இல்லாத சூழலில், பல இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. கருணாநிதியை போலவே மு.க.ஸ்டாலினும் துணிச்சலுடனும், உறுதியுடனும் செயல்படுவதால் பெரியார் சிலை அவமதிப்பை வன்மையாக கண்டிக்கிறார். அண்மையில் ஆளுக்கொரு சட்டம் என்பது போல சிலர் மீது வழக்குப்பதிந்து விரைவில் கைது செய்வதும், மேலும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்தும் கைது செய்வதை விடுத்து போலீஸ் பாதுகாப்பு அளிப்பதும் நடந்து வருகிறது.

தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் உறுதி ஏற்றபோது மத்திய அரசு தமிழகத்தை காவி மயமாக்குவதை பா.ஜனதா அரசு என்று சொல்லவில்லை. மோடி என்று குறிப்பிடவில்லை. பன்முக தன்மை கொண்ட இந்தியாவை ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாசாரம் என்று மாற்ற நினைக்கும் மத்திய பா.ஜனதா ஆட்சியை அகற்ற வேண்டும்.

தமிழகத்தில் ஊழல் புரிந்த அரசை மாற்ற வேண்டும். எச்.ராஜா மத கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார். போலீஸ் நிலையங்களில் அவர் மீது வழக்குப்பதிவு செய்தும், மத்திய அரசுக்கு பயந்து தமிழக அரசு கைது செய்யவில்லை.

முற்றிலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். அப்போது நாட்டின் அடுத்த பிரதமரை மு.க.ஸ்டாலின் தான் முடிவு செய்வார்.

கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி எதிர்க்கட்சிகளின் தவறுகளை சுட்டிக்காட்டி போராட்டம் நடத்த போவதாக அறிவித்து உள்ளார். இதுகுறித்து பா.ஜனதா எம்.பி. ஒருவர் கவர்னரிடம் ‘எப்படி ஆட்சியில் இருக்கும் அரசை போராட அனுமதிக்கிறீர்கள்‘ என்று கேட்டு மனு கொடுத்து உள்ளார். ஆனால் தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு அதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடும்போது மத்திய பா.ஜனதா அரசு கண்ணை கட்டி கொண்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். #Karunanidhi #MKStalin #TrichySiva #HRaja
Tags:    

Similar News