செய்திகள்
பரமத்திவேலூர் அருகே வாலிபர் தீக்குளிப்பு
பரமத்திவேலூர் அருகே குடும்ப தகராறில் வாலிபர் தீக்குளித்தார். அவருக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள தெருக்கலை, தேவேந்திர தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 27). கூலி தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (25). இவர்களுக்கு பாரதி(3) என்ற மகனும், 4 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.
சீனிவாசனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாகவும், வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு வரும் போது குடி போதையில் வருவதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று மதியம் கணவன், மனைவிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சீனிவாசன் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தலையில் ஊற்றி, தீ வைத்துக் கொண்டார்.
திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு நிலைமை மேலும் மோசமானதால், முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சீனிவாசன் அனுப்பி வைக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து டாக்டர்கள், அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.