செய்திகள்
திமுகவுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் - அதிமுக கூட்டத்தில் முதல்வர் அறிவிப்பு
திமுகவுக்கு எதிராக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 25-ம் தேதி கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #ADMK #DMK #EdappadiPalaniswamy
சென்னை:
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இவர்களுடன் மா.பா. பாண்டியராஜன், செல்லூர் ராஜூ, அன்பழகன், வளர்மதி மற்றும் நிர்வாகிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர். 30-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதனை அடுத்து, திமுகவுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது.
இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை ராணுவத்திற்கு தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு உதவிகளை செய்தன என முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சே வாக்குமூலம் ஆக தந்துள்ளார்.
இந்த அடிப்படையில், இலங்கை தமிழர் படுகொலையில் கூட்டணி அரசாக இருந்த தி.மு.க. மற்றும் காங்கிரசை தண்டிக்க வேண்டும். இன படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களை போர் குற்றவாளிகளாக்கி தண்டிக்க வேண்டும்.
இதனை வலியுறுத்தி தி.மு.க.வுக்கு எதிராக வருகிற 25-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் அ.தி.மு.க. சார்பில் கண்டன பொதுகூட்டம் நடத்தப்படும் என அவர் அறிவித்துள்ளார்.