செய்திகள்

திருவெண்ணைநல்லூர் அருகே லாரி மீது கார் மோதல்- வியாபாரி பலி

Published On 2018-09-17 11:45 GMT   |   Update On 2018-09-17 11:45 GMT
திருவெண்ணைநல்லூர் அருகே நள்ளிரவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் வியாபாரி பலியானார். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருவெண்ணைநல்லூர்:

பெரம்பலூரை சேர்ந்தவர் நடராஜன் (வயது 56). வியாபாரி. கட்டிட வேலைகளும் செய்து வந்தார். இவரது மனைவி ராணி (50), மகன்கள் சத்யபிரகாஷ் (27), மதியழகன் (23), சத்யபிரகாசின் மனைவி பிரபா (21), உறவினர் காந்தி (54). இவர்கள் அனைவரும் பெரம்பலூரில் இருந்து கார் மூலம் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர்.

பின்னர் அவர்கள் அதே காரில் சென்னையில் இருந்து பெரம்பலூர் புறப்பட்டனர். அந்த காரை காந்தி ஓட்டி வந்தார். அவர்கள் வந்த கார் நேற்று இரவு 11.30 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சித்தாநங்கூர் அய்யனார் கோவில் அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது காந்தியின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி, முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் காரின் பயணம் செய்த நடராஜன், காந்தி, சத்யபிரகாஷ், மதியழகன், பிரபா, ராணி ஆகிய 6 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்த நடராஜன் உள்பட 6 பேரையும் மீட்டு சிகிச்சைக் காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நடராஜன் பரிதாபமாக இறந்தார். மற்ற 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் ஜோகிந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News