செய்திகள்

திருபுவனை அருகே இலவச சீருடை வழங்காததால் மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்

Published On 2018-09-14 11:34 GMT   |   Update On 2018-09-14 12:06 GMT
திருபுவனை அருகே இலவச சீருடை வழங்காததால் பள்ளி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருபுவனை:

புதுவை அரசின் கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி தொடங்கி ஒரு வாரத்துக்குள் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு பள்ளி தொடங்கி 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் இலவச சீருடை வழங்கப்படவில்லை. இதனால் ஏழை மாணவர்கள் பெரும் தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இதையடுத்து சீருடை வழங்க கோரி அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் இலவச சீருடை வழங்ககோரி கலிதீர்த்தாள்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கடந்த 12-ந்தேதி மாணவர் கூட்டமைப்பினருடன் இணைந்து போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் இலவச சீருடை வழங்கப்படாததை கண்டித்தும் உடனடியாக இலவச சீருடை வழங்க கோரியும் திருபுவனை அருகே மதகடிப்பட்டு பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் இன்று காலை பள்ளி வாயில் கதவை இழுத்து மூடி வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்களும் பங்கேற்றனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் பள்ளி தலைமை ஆசிரியர் கணபதி பேச்சுவார்த்தை நடத்தினார். கல்வித்துறை அதிகாரிகளிடம் பேசி இலவச சீருடை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை ஏற்று மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புக்கு திரும்பினர். பெற்றோரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். #tamilnews
Tags:    

Similar News