பழனியில் இருந்து திருப்பதி செல்லும் 600 கிலோ பூக்கள்
பழனி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் நாளை (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 21-ந்தேதி வரை நடக்கிறது. இந்த விழாவுக்காக தமிழகம் உள்பட பிற மாநிலங்களில் இருந்து டன் கணக்கில் பூக்கள் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்படும்.
அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்தும் பிரம்மோற்சவ விழாவுக்காக 10 டன் பூக்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக 600 கிலோ பூக்களை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
முன்னதாக பழனி மாரியம்மன் கோவில் வளாகத்தில் புஸ்ப கைங்கரிய சபா சார்பில் வாடாமல்லி, பிச்சி, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்கள் சேகரித்து வைக்கப்பட்டது. பின்னர் அவற்றை தரம் பிரித்து சாக்குகளில் அடைக்கும் பணி நடந்தது. முருகன் கோவில் துணை செந்தில்குமார், ஓட்டல் கண்பத் உரிமையாளர் ஹரிகரமுத்து, சரவண பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன் உள்பட பலர் பூக்களை சாக்கு மூட்டைகளில் அள்ளி போட்டனர். அதையடுத்து அந்த மூட்டைகள் அனைத்தும் வாடகை வேன் மூலம் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருப்பதியில் பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 9-ந்தேதி முதல் 18-ந்தேதி வரையும் நடைபெற உள்ளது. #tirupatitemple