செய்திகள்

கருணாநிதி பூரண உடல் நலம் பெற வேண்டுகிறேன்- தம்பிதுரை பேட்டி

Published On 2018-07-28 05:19 GMT   |   Update On 2018-07-28 05:19 GMT
தமிழுக்காகவும், தமிழ் இனத்திற்காகவும் பாடுபட்ட கருணாநிதி பூரண உடல் நலம் பெற வேண்டுவதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார். . #ADMK #ThambiDurai #DMK #Karunanidhi
கரூர்:

கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகளை பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பித்துரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கலெக்டர் அன்பழகன் ஆகியோர் இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்ட அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அடுத்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறும். மருத்துவமனையும் செயல்படும்.

உள்ளாட்சி தேர்தலை கண்டு அ.தி.மு.க.வுக்கு பயம் இல்லை. ஜெயலலிதா இருந்த போதே வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. தி.மு.க.தான் கோர்ட்டுக்கு சென்று இடைக்கால தடை வாங்கியது. மத்திய அரசு ரூ.2000 கோடி உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கியுள்ளது. மீதம் உள்ள தொகையும் விரைவில் தருவதாக கூறியுள்ளனர்.


தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது எங்களுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி கிடையாது. தமிழுக்காகவும், தமிழ் இனத்திற்காகவும் பாடுபட்ட அவர் பூரண உடல் நலம் பெற வேண்டுகிறேன்.

அ.தி.மு.க.வுக்கு மக்கள் ஆதரவு உள்ளது. கருத்து கணிப்புகளிலும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு பெருகி கொண்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. எந்த தேர்தல் வந்தாலும் நாங்கள் சந்திக்க தயார். பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார். #ADMK #ThambiDurai #DMK #Karunanidhi
Tags:    

Similar News