செய்திகள்
திருக்கண்ணமங்கையில் வாய்க்கால்களை தூர்வாரக்கோரி சாலை மறியல்
திருக்கண்ணமங்கையில் வாய்க்கால்களை தூர்வாரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வாய்க்கால்கள் தூர்வாரப்படும் என பொதுப்பணித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை வாய்க்கால்கள் தூர்வாரப் படவில்லை.
இந்நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்க்காக மேட்டூரிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் திருவாரூர் வந்தடைந்தது. அப்பகுதி விவசாயிகள் தூர் வாராத பொதுப்பணித் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து 100க்கும் மேற்பட்டோர் திருக்கண்ணமங்கை கடை வீதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதனால் திருவாருர் - கும்பகோணம் நெடுஞ்சாலையில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் வாய்க்கால்கள் உடனடியாக தூர் வாரப்படும் என உறுதியளித்ததின் பேரில் மறியல் கைவிடப்பட்டது. #Tamilnews