செய்திகள்

பள்ளி மாணவன் வெட்டி கொலை: தாயுக்கும் அரிவாள் வெட்டு- போலீசார் விசாரணை

Published On 2018-07-11 08:24 GMT   |   Update On 2018-07-11 08:24 GMT
கம்பைநல்லூர் அருகே பள்ளி மாணவனை அரிவாளால் வெட்டி கொன்ற மர்ம கும்பல் தாயையும் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தருமபுரி:

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி கலா.இவர்களது மகன் வெற்றிவேல் (வயது 16). இவர் அதேபகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று இரவு வீட்டில் கலாவும், வெற்றிவேலும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் சிலர் வந்து கதவை தட்டினர். யாரோ கதவை தட்டுகின்றனர் என்று கதவை திறந்த வெற்றிவேல் அதிர்ச்சி அடைந்தார். அப்போது வீட்டில் வெளியில் மர்ம நபர்கள் அரிவாளுடன் நின்று கொண்டிருந்தனர். உடனே கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் வெற்றிவேலை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

இதனால் வலியால் வெற்றிவேல் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த கலாவையும் அவர்கள் சரமாரியாக வெட்டினர்.

இவர்களது அலறல் சத்தம் கேட்கவே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தில் வெற்றிவேல் ரத்த வெள்ளத்தில் அதே இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கம்பைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து வெற்றிவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த கலாவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

சொத்து தகராறு காரணமாக கலாவையும் அவரது மகனையும் மர்ம நபர்கள் வெட்டினார்களா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
Tags:    

Similar News