எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே உள்ள அயன்கரிசல்குளம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாராயனமூர்த்தி. கூலி தொழிலாளி. இவரது மனைவி சத்யா(வயது 25). இவர்களுக்கு கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது, நவின்(3), சுபாஷ்ஸ்ரீ(1½) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.
நாராயணமூர்த்திக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் குடித்துவிட்டு வந்து தினமும் தகராறு செய்துவந்துள்ளார். வீட்டிற்கு செலவுக்கும் பணம் கொடுக்காமல் இருந்துள்ளார். இதையடுத்து கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் வாழ்கையில் வெறுப்படைந்த சத்யா நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த மாசார்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, தனிப்பிரிவு தலைமை காவலர் சகாதேவன் ஆகியோர் விரைந்து வந்து சத்யா உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து மாசார்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்யாவுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் இது தொடர்பாக கோவில்பட்டி ஆர்.டி.ஓ.விஜயா தலைமையில் விசாரணை நடைபெறுகிறது.