செய்திகள்

முல்லை பெரியாறு அணை பகுதியில் மழை ஓய்ந்தது

Published On 2018-06-22 10:25 GMT   |   Update On 2018-06-22 10:25 GMT
முல்லைப் பெரியாறு அணை பகுதியில் மழை ஓய்ந்ததால் அணை நீர் மட்டம் உயராமல் உள்ளது.
கூடலூர்:

தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கோடை மழை ஓரளவு கைகொடுத்ததால் முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் உயர்ந்தது.

தென்மேற்கு பருவ மழையும் தொடர்ந்ததால் அணையின் நீர் மட்டம் 127.10 அடியை எட்டியது. எனவே அணையின் நீர் மட்டம் 142 வரை செல்லும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தற்போது மழை குறைந்துள்ளதால் அணைக்கு நீர் வரத்து குறையத் தொடங்கியுள்ளது. 1406 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக 1400 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

வைகை அணையின் நீர் மட்டம் 45.51 அடியாக உள்ளது. 892 கன அடி நீர் வருகிறது. 60 கன அடி நீர் மதுரை மாநகர குடிநீருக்காக திறந்து விடப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 41.70 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.

சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 124.64 அடியாக உள்ளது. வரத்து இல்லை. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 4, தேக்கடி 7 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. மழை குறைந்து வருவதால் பெரியாறு அணையின் நீர் மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த வருடமாவது 2-வது போக நெல் சாகுபடி நடைபெறுமா? என கேள்வி எழுந்துள்ளது. எனவே விவசாயிகள் மழை தொடர்ந்து அணையின் நீர் மட்டம் உயர வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர்.

Tags:    

Similar News