செய்திகள்

பிரதமர் முன்னிலையில் மத்திய உள்துறை மந்திரியுடன் நாராயணசாமி வாக்குவாதம்

Published On 2018-06-18 07:40 GMT   |   Update On 2018-06-18 07:40 GMT
டெல்லியில் பிரதமர் தலைமையில் நடந்த நிதி ஆயோக் மாநாட்டில் உரை நிகழ்த்திய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மத்திய உள்துறை மந்திரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி:

டெல்லியில் நேற்று மத்திய நிதி ஆயோக் மாநாடு நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மாநாட்டில் மத்திய மந்திரிகள் மற்றும் அனைத்து மாநில முதல்-மந்திரிகள் கலந்து கொண்டனர்.

இதில், புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமியும் பங்கேற்றார். ஒவ்வொரு முதல்-அமைச்சரும் கூட்டத்தில் உரை நிகழ்த்த அழைக்கப்பட்டனர்.

அதேபோல முதல்- அமைச்சர் நாராயணசாமியும் உரை நிகழ்த்தினார். தனது உரை நிறைவு பெற்றபோது, திடீரென நாராயணசாமி புதுவை கவர்னர் பற்றி கூட்டத்தில் குற்றச்சாட்டுகளை கூறினார்.

கவர்னரை பெயரை வெளிப்படையாக குறிப்பிடாமல் பேசிய அவர் அதிகாரத்தில் இருப்பவர்கள் மாநில அரசின் தினசரி நடவடிக்கைகளில் தலையிட்டு அரசியல் சாசன சட்டத்தை மீறி செயல்படுகிறார்கள் என்று கூறினார்.

அப்போது உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் இது இந்த கூட்டத்தில் பேச வேண்டிய வி‌ஷயம் அல்ல என்று கூறினார். அதற்கு நாராயணசாமி, இது சம்பந்தமாக நான் பிரதமர் மற்றும் உள்துறை மந்திரியிடம் புகார் கூறி அவரை மாற்றும்படி கூறியிருக்கிறேன்.

மாநில நிர்வாகி அரசு முடிவுகளை கூட சமூக வலைதளங்கள் மூலமாக வெளியிடுகிறார், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியுடன் மோதல் போக்கில் செயல்படுகிறார் என்று கூறினார்.

நாராயணசாமி குற்றச் சாட்டியதற்கு உள்துறை மந்திரி ஆட்சேபனை தெரிவித்ததால் கூட்டத்தில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.

இதுசம்பந்தமாக நாராயணசாமியிடம் கேட்டபோது, நான் அந்த கூட்டத்தில் பேசியது என்ன என்பது பற்றி வெளியே சொல்ல முடியாது என்று கூறினார்.
Tags:    

Similar News