செய்திகள்
மு.க.ஸ்டாலின் நாளை திருவண்ணாமலை வருகை
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் நாளை பொற்கிழிகள் வழங்கும் விழா நடக்கிறது.இதில் முகஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
திருவண்ணாமலை:
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை திருக்கோவிலூர் ரோடு சாரோனில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நகர தி.மு.க மற்றும் அனைத்து அணிகளின் சார்பில் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகள் வழங்கும் விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது.
மாவட்ட செயலாளர் எ.வ.வேலு எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.சிவானந்தம், எம்.எல்.ஏ.க்கள் கு.பிச்சாண்டி, மு.பெ.கிரி, கே.வி.சேகரன், எஸ்.அம்பேத்குமார், மாவட்ட அவைத் தலைவர் வேணுகோபால், தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு செயலாளர் திருவேங்கடம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
விழாவில் மாவட்ட நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் அணிகளின் அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.