வத்தலக்குண்டு பகுதியில் குடிநீர் தட்டுப்பாடால் பொதுமக்கள் அவதி
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு பகுதியில் 18 வார்டுகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு மஞ்சளாறு மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஆழ்துளை கிணறு அமைத்தும் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.
கடந்த 4 ஆண்டுகளாகவே வத்தலக்குண்டு பகுதியில் மழை இல்லை. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போதும் கோடை மழை மற்றும் தென்மேற்கு பருவமழை தேனி மாவட்டத்தில் பரவலலாக பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்திலும் பல இடங்களில் தொடர்ந்து சாரல் மழை பெய்தபோதும் வத்தலக்குண்டு பகுதியில் மழை இல்லாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பேரூராட்சி மூலம் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்வது வழக்கம். ஆனால் தற்போது 18 நாட்கள் ஆகியும் குடிநீர் வினியோகம் சீராக இல்லை. இதனை பயன்படுத்தி டிராக்டர்களில் அதிக கட்டணம் வசூலித்து தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. இது குறித்து பலமுறை பேரூராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
எனவே மாவட்ட நிர்வாகம் வத்தலக்குண்டு பகுதியில் குடிநீர் வினியோகம் சீராக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக விலைக்கு தண்ணீர் விற்கும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். #Drinkingwatershortage