செய்திகள்

திருப்பூரில் வாலிபர் கழுத்தை அறுத்து கொலை- போலீசார் விசாரணை

Published On 2018-06-09 09:29 GMT   |   Update On 2018-06-09 09:29 GMT
திருப்பூர் அருகே உள்ள கணியாம்பூண்டியில் பாறை குழி அடையாளம் தெரியாத வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் அருகே உள்ள கணியாம்பூண்டியில் பாறை குழி உள்ளது. இங்கு 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். பாறை குழிக்குள் இறங்கி வாலிபர் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

வாலிபர் உடலை போலீசார் சோதனை செய்த போது அவரது கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. எனவே அவரை யாரோ மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்து பிணத்தை பாறை குழியில் வீசி சென்றது தெரிய வந்தது.

பாறை குழி பகுதியில் போலீசார் ஆய்வு செய்த போது அங்கு ரத்த கறை படிந்து இருந்தது. மேலும் அருகில் இரும்பு சங்கிலியும் கிடந்தது.எனவே இரும்பு சங்கிலியால் கழுத்தை நெரித்து பின்னர் அறுத்து கொன்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கொலை நடந்த இடத்தை துணை போலீஸ் கமி‌ஷனர் உமா பார்வையிட்டார். மேலும் போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது கொலை நடைபெற்ற இடத்தில் மோப்பம் பிடித்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் வரை சென்று நின்றது. கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? எந்த ஊர்? என்பது தெரியவில்லை. அவரை வெளி இடங்களில் இருந்து யாராவது இங்கு கடத்தி கொண்டு வந்து கொலை செய்து பாறை குழியில் வீசி சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

கொலை செய்யப்பட்டவர் யார்? என்பதை கண்டு பிடிக்க இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் யாராவது மாயமாகி உள்ளதாக புகார் வந்துள்ளதா? என தகவல்களை சேகரித்து வருகிறார்கள். #Tamilnews
Tags:    

Similar News