கோவை மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் பலி
கோவை:
புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் வெற்றிவேல் (வயது 26). இவர் கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள கோலாபட்டியில் தங்கி இருந்து அங்குள்ள கோழி பண்ணையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் கோழிபண்ணையை மோட்டார் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தடைபட்டது.
இதனையடுத்து ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் எடுத்து சுத்தம் செய்வதற்காக வெற்றிவேல் ஜெனரேட்டர் சுவிட்சை போட்டார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே வெற்றிவேல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை மதுக்கரை அருகே உள்ள நாச்சிபாளையத்தை சேர்ந்தவர் நடராஜ் (43). சம்பவத்தன்று இவர் வாட்டர் ஹீட்டர் மூலம் சுடுதண்ணீர் போட்டார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசியது. இதில் உடல் கருகி படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே நடராஜ் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.