செய்திகள்

14 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த தாய், தந்தை உள்பட 3 பேர் கைது

Published On 2018-04-25 11:21 GMT   |   Update On 2018-04-25 11:21 GMT
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே 14 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அரிதாமங்கலம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு கடந்த 4-ந் தேதி திருமண முடிந்து வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இது குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை மாவட்ட சமூக நல அலுவலர் கிறிஸ்டீனா டார்த்தி சம்பவ இடத்திற்கு சென்று 14 வயது சிறுமியை மீட்டு திருவண்ணாமலையில் உள்ள குழந்தைகள் நலக்குழுமத்தில் ஒப்படைத்தார்.

இதையடுத்து நேற்று முன்தினம் குழந்தைகள் நலக்குழுமத் தலைவர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் 14 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த சிறுமியின் தந்தை சேகர், தாய் லட்சுமி, சிறுமியை திருமணம் செய்த பாண்டியன், அவரது தந்தை கருணாநிதி, கருணாநிதியின் மனைவி ரோஜா ஆகியோர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதில் சிறுமியின் தந்தை சேகர், தாய் லட்சுமி மற்றும் ரோஜா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி மகிழேந்தி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரது உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இது குறித்து மாவட்ட நீதிபதி மகிழேந்தி மற்றும் சார்பு நீதிபதி ராஜ்மோகன் ஆகியோர் கூறுகையில், ‘‘திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் முறையாக குழந்தை திருமணம் செய்து வைத்த பெற்றோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். குழந்தை திருமணம் செய்யப்பட்டதற்கான உரிய ஆவணங்கள் உள்ளதால், அவர்கள் விடுதலை செய்யப்படுவதற்கான சாத்தியம் இல்லை. குறைந்தது 5 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது’’ என்றனர்.

Tags:    

Similar News