செய்திகள்
குழந்தைகளை கொன்று தற்கொலை செய்த அந்தோணி, சிகிச்சையில் உள்ள முனீஸ்வரி

சிவகாசி அருகே மகன், மகளை கழுத்தறுத்துக் கொன்று தந்தை தற்கொலை

Published On 2018-04-22 01:54 GMT   |   Update On 2018-04-22 04:07 GMT
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மகன் மற்றும் மகளை கழுத்தறுத்துக் கொன்று விட்டு, மனைவியையும் கொலை முயற்சி செய்து விட்டு போலீசுக்கு பயந்து தந்தை தற்கொலை செய்துள்ளார்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை போலீஸ் சரகத்துக்குட்பட்டது சல்வார்பட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி (வயது45), விறகு வெட்டும் தொழிலாளி.

இவரது மனைவி முனீஸ்வரி (32), மகள் முத்துலட்சுமி (9), மகன் ஈஸ்வரன் (4). நேற்று இரவு குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் படுத்து இருந்தனர்.

இன்று காலை அவர்கள் வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது குழந்தைகள் முத்துலட்சுமி, ஈஸ்வரன் ஆகியோர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தனர்.

முனீஸ்வரி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். ஆனால் அந்தோணி மட்டும் மாயமாகி இருந்தார். ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த முனீஸ்வரி சிகிச்சைக்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் வெம்பக்கோட்டை போலீசார் விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்தோணிதான் மனைவி மற்றும் 2 குழந்தைகளை கழுத்தை அறுத்து இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். அவரை போலீசார் தேடி வந்தனர்.

கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சிறுவன்-சிறுமியின் உடல்களை போலீசார் பிரேத பரிசோதனைக்காக எடுத்து சென்றனர்.

இந்த நிலையில் சேது ராமலிங்காபுரம் பகுதியில் தனியார் பட்டாசு ஆலை அருகே கறுத்து அறுக்கப்பட்ட நிலையில் அந்தோணி பிணமாக கிடந்தார். அவர் போலீசுக்கு பயந்து தற்கொலை செய்து இருக்கலாம் என தெரிகிறது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அந்தோணி மனநிலை பாதிக்கப்பட்டதாகவும் இதற்காக சிகிச்சை பெற்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனவே அவர் மனநலம் பாதிப்புக்கு உள்ளாகி மனைவி மற்றும் குழந்தைகளை கழுத்தை அறுத்தாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News