நெல்லை-தூத்துக்குடி மாவட்டத்தில் 20 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
நெல்லை:
தென் தமிழக கடலோர பகுதிகளில் இன்று காலை முதல் நாளை இரவு 11.30 மணி வரை 18 முதல் 22 விநாடிகள் இடைவெளியில் 8.25 அடி முதல் 11.50 அடி உயரத்திற்கு கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என்று இந்திய கடல்சார் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே கடற்கரை யொட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள், பொதுமக்கள் இந்த 2 நாட்களில் கடல் அருகில் செல்ல வேண்டாம். கடல் சீற்றம் குறித்து கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும், மீனவர்களுக்கும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் ஏராளமான மீனவ கிராமங்கள் உள்ளன. இதையடுத்து நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் ஏராளமான படகுகள் கடற்கரையோரம் நிறுத்தப்பட்டிருந்தது.