எச்.ராஜா வீடு முற்றுகை- என்.ஆர்.தனபாலன் உள்பட 100 பேர் கைது
போரூர்:
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கனிமொழி குறித்து விமர்சனம் செய்துள்ளார். இதற்கு தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று காலை வடபழனி பஸ் நிலையம் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள எச்.ராஜாவின் வீட்டை முற்றுகையிட ஏராளமான தி.மு.க.வினர் அங்கு திரண்டனர்.
மேலும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமையிலும் ஏராளமான தொண்டர்கள் அங்கு குவிந்தனர். அவர்கள் கோஷமிட்டபடி எச்.ராஜாவின் வீட்டை முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட்டனர்.
அடுக்குமாடி குடியிருப்பின் அருகே போலீசார் தடுப்பு ஏற்படுத்தி அவர்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்தனர். அப்போது சிலர் குடியிருப்புக்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட என்.ஆர்.தனபாலன், அகரமேல் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஏ.ஜி.ரவி உள்ளிட்ட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.