செய்திகள்

திருமங்கலம் அருகே கார் மோதி விபத்து: தொழிலாளி பலி

Published On 2018-04-18 11:39 GMT   |   Update On 2018-04-18 11:39 GMT
திருமங்கலம் அருகே மனைவிக்கு குழந்தை பிறக்கும் நேரத்தில் வாலிபர் விபத்தில் சிக்கி இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பேரையூர்:

திருமங்கலம் அருகே கள்ளிக்குடி போலீஸ் சரகத்திற்குட்பட்ட உன்னிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பொம்முராஜ் (வயது 32). இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மகாலட்சுமி நேற்று காலை பிரசவத்திற்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் மனைவிக்கு துணையாக இருப்பதற்காக நேற்று இரவு 8 மணிக்கு பொம்முராஜ் தனது மோட்டார் சைக்கிளில் ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டார். இவருடன் உறவினர்களான பிளஸ்-2 மாணவர்கள் கார்த்திக் (18), மாரிச்சாமி (19) ஆகியோரும் சென்றனர்.

திருமங்கலம் அருகே உள்ள ஆவல்சூரன்பட்டி 4 வழிச்சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வேகமாக வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவர்களை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பொம்முராஜ் பரிதாபமாக இறந்தார். கார்த்திக், மாரிச்சாமி ஆகியோர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மனைவிக்கு குழந்தை பிறக்கும் நேரத்தில் வாலிபர் விபத்தில் சிக்கி இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News