செய்திகள்

திருமங்கலத்தில் டாக்டர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

Published On 2018-04-17 10:20 GMT   |   Update On 2018-04-17 10:20 GMT
திருமங்கலத்தில் டாக்டர் வீட்டின் கதவை உடைத்து 7 பவுன் நகை மற்றும் ரூ. 5 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
பேரையூர்:

திருமங்கலம் கணபதி நகர் 8-வது தெருவைச் சேர்ந்தவர் திருவள்ளுவன் (வயது 50). திருமங்கலம் தெற்கு தெருவில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரியில் டாக்டராக உள்ளார்.

இவருடைய மனைவி சாந்தி (45), புங்கன்குளம் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக உள்ளார். மகன் பள்ளிக்குச் சென்றதும் கணவன்- மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்குச் சென்று விட்டனர்.

மாலையில், சாந்தி வீடு திரும்பினார். காம்பவுண்டு கேட்டை திறந்து உள்ளே சென்ற அவர், வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த துணிகள் வெளியே சிதறிக் கிடந்தன.

வீட்டின் கதவை உடைத்து யாரோ மர்ம மனிதர்கள் உள்ளே புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து திருமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 5 லட்சம் கொள்ளை போயிருப்பதாக தலைமை ஆசிரியை சாந்தி தெரிவித்தார்.

தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு, யாரோ இந்த துணிகர செயலில் இறங்கி உள்ளனர். அவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News