செய்திகள்
காசிமேட்டில் மீனவர் கொலை வழக்கில் வாலிபர் கைது
காசிமேட்டில் மீனவர் கொலை வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயபுரம்:
காசிமேடு சிங்காரவேலன் நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் பிரவீன்குமார் என்கிற அஜீத்குமார் (24). மீனவரான இவர் காசிமேடு பழைய மேம்பாலம் அருகே நேற்று இரவு குடிபோதையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த டபுள் சுரேஷ் (22) என்பவர் இவருடன் தகராறு செய்தார். பின்னர் பிரவீன் குமார் தலையில் பாராங்கல்லை தூக்கிபோட்டு கொலை செய்தார்.
அதையடுத்து தலைமறைவாக இருந்த டபுள் சுரேசை இன்ஸ்பெக்டர் சிதம்பரபாரதி தலைமையிலான தனிப்படை போலீசார் தேடிவந்தனர். கொலை செய்துவிட்டு காசிமேடு கடற்கரை பகுதியில் பதுங்கியிருந்த டபுள் சுரேசை கைது செய்தனர். விசாரணையில் முன்விரோதம் காரணமாக பிரவீன் குமாரை கொலை செய்ததாக அவர் தெரிவித்தார். இந்த வழக்கில் கொலை நடந்த 3 மணிநேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.